கோவை : மேட்டுப்பாளையம் அருகே கீழ் சாதி பெண்ணை காதலித்த தம்பியை அரிவாளால் வெட்டி கொலை செய்த அண்ணன் போலீசில் சரணடைந்தார். அவர் மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கோவை : மேட்டுப்பாளையம் அருகே தாழ்த்தப்பட்ட சாதி பெண்ணை காதலித்த தம்பியை அரிவாளால் வெட்டி கொலை செய்த அண்ணன் போலீசில் சரணடைந்தார். அவர் மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள ஸ்ரீ ரங்கராயன் ஓடையைச் சேர்ந்த கருப்புசாமியின் மகன் கனகராஜும் (22), அதே பகுதியில் உள்ள தர்ஷினி பிரியாவும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்தனர். இதில், கனகராஜ் உயர் சாதிப் பிரிவை சேர்ந்தவர் எனக் கூறப்படுகிறது. மேலும், தர்ஷினி பிரியா தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர். இதனால், இவர்கள் இருவரின் காதலுக்கு கனகராஜின் சகோதரர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தார். இந்த நிலையில், நேற்று காதல் ஜோடிகள் இருவரும் சிறுமுகை அருகே உள்ள வெள்ளிபாளையம் பகுதியில் பேசிக் கொண்டிருந்தனர்.

அப்போது, கனகராஜின் சகோதரர் வினோத், அரிவாளுடன் வந்து இருவரையும் சரமாரியாக தாக்கியுள்ளார். இதில், கனகராஜ் சரமாறியாக தாக்கப்பட்டதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், தர்ஷினி பிரியா ஆபத்தான நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

கோவை மேட்டுப்பாளையம் அருகே காதல் ஜோடிகளை சாதியை காரணம் காட்டி அரிவாளால் வெட்டியதில், வாலிபர் கொல்லப்பட்ட சம்பவம் கோவை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே, மேட்டுப்பாளையம் காதல் விவகாரத்தில் தம்பியை கொலை செய்த அண்ணன் வினோத்குமார் மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் இன்று காலை சரணடைந்தார். போலீசார் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், வினோத்குமார் மீது கொலை வழக்கு, தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை பிரிவு உட்பட நான்கு பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.