கோவை : கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதி மக்களின் குறைகளை பூர்த்தி செய்ய மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில், மேம்படுத்தப்பட்ட கோவை மாநகராட்சி செயலி ஜுலையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
கோவை : கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதி மக்களின் குறைகளை பூர்த்தி செய்ய மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில், மேம்படுத்தப்பட்ட கோவை மாநகராட்சி செயலி ஜுலையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வசித்து வரும் பொதுமக்களின் பொது பிரச்சனைகளுக்கு எளிதில் தீர்வு கண்டறிவதற்கான பணிகளை கோவை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. இதற்காக தொடங்கப்பட்ட கோவை மாநகராட்சியின் அதிகாரப்பூர்வ செயலி முழுமையாக செயல்படவில்லை. இது தொடர்பாக பொதுமக்களும் நிர்வாகத்திற்கு பல்வேறு புகார்களை தெரிவித்து வந்தனர். இதையடுத்து, செயலி மறுசீரமைக்கப்பட்டு ஜுலை மாதம் முதல் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த செயலியில் அதிநவீன வசதிகளுடன், பொதுமக்கள் சுட்டிக்காட்டும் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணப்படுவதும் பற்றிய தகவல்கள் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், "தற்போது வரையிலான வாட்ஸ்அப் புகார்கள் மற்றும் பிரச்சனைகள் தொடர்ந்து கையாளப்பட்டு வருகிறது. வாட்ஸ்அப்பிற்கு வரும் புகார் எண்களுக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பதில் குறுஞ்செய்தியிலோ அல்லது அலைபேசியிலோ தொடர்பு கொண்டு பதில் அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது, செயலி மேம்படுத்தப்படும்பட்சத்தில், ஐ.டி. உருவாக்கப்பட்டு, புகார்கள் மீதான நடவடிக்கைகள் பற்றி தெரிந்து கொள்ள முடியும். மேலும், வாட்ஸ் அப், எஸ்.எம்.எஸ்., இணைய பக்கம், ஜி.ஓ.ஐ. போர்ட்டல் என அனைத்தும் ஒரே கூரையில் கொண்டு வரப்பட்டு, அதிகாரிகளால் கண்காணிக்கப்படும்," எனத் தெரிவித்தனர்.
கோவை மாநகராட்சி செயலியின் மூலமாக 1,800-க்கும் மேற்பட்ட பிரச்சனைகள் பற்றிய புகார் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த மாதத்தில் 400 ஆக குறைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல், 2 வாரங்களுக்கு ஒரு முறை மக்கள் குறை தீர்ப்பு முகாமின் நிலவரம் பற்றி கோவை மாநகராட்சியின் துணை ஆணையர் தலைமையில் நடக்கும் கண்காணிப்பு கூட்டமும் மக்களுக்கு மேலும் பயனுள்ளதாக அமைந்துள்ளது. இதன் மூலம், கோவை மாநகராட்சியிடம் மக்கள் அளிக்கும் புகார்கள் மற்றும் குறைகள் மீது உடனடியாக தீர்வு காணப்படுகிறது.
அதேபோல, இடைநிறுத்தம் செய்யப்பட்டிருந்த மக்கள் குறை தீர்ப்பு முகாமையும் கோவை மாநகராட்சி மீண்டும் நடத்தி வருகிறது. அதாவது, மண்டலம் வாரியாக மக்கள் குறை தீர்ப்பு முகாம் நடத்தப்பட்டு, பொதுமக்களின் குறைகளை நிவர்த்தி செய்ய துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.