கோவை : கோவை மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் லஞ்சம் வாங்கும் காவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார் தெரிவித்துள்ளார்.
கோவை : கோவை மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் லஞ்சம் வாங்கும் காவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கடந்த சில வருடங்களாகவே காவல்துறையினர் லஞ்சம் வாங்குவது அதிகரித்து வந்தது. இது தொடர்பாக புகார்கள் அளிக்கப்பட்டாலும் உரிய நடவடிக்கை எடுக்காதது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், புதிதாகப் பொறுப்பேற்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை ஒழிக்க வேண்டும், சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் லஞ்சம் வாங்குவதும் கொடுப்பதும் குற்றம் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். அதேபோல, லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், பெரியநாயக்கன் பாளையம் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு காதல் ஜோடிகள் சாலை ஓரத்தில் நின்று பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு சென்ற தலைமை காவலர் சுரேஷ் மற்றும் பழனிசாமி ஆகியோர் காதலர்களை சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாக மிரட்டியுள்ளனர். இதைத்தொடர்ந்து, நடவடிக்கை எடுக்காமல் இருக்க 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கொடுக்க வற்புறுத்தியுள்ளனர். பின்னர், காவலர்கள் லஞ்சமாக பணத்தைப் பெற்றுச் சென்றனர். இது தொடர்பாக காதல் ஜோடிகள் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்திருந்தனர்.
இந்த நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் லஞ்சம் பெற்ற இரண்டு காவலர்கள் மீது அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். இதில், தலைமை காவலர் சுரேசை பணியிடை நீக்கம் செய்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார், மற்றொரு காவலரை ஆயுதப்படைக்கு மாற்றியுள்ளார்.
இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார் கூறியதாவது :- கோவை மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காவல்துறையினர் லஞ்சம் வாங்கினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், காவல்துறையினர் லஞ்சம் வாங்குவது தொடர்பான புகார்கள் வந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல, லஞ்சப் புகாரில் சிக்கிய 2 காவலர்கள் மீது நேற்று நடவடிக்கை எடுத்துள்ளோம். துணைக் கண்காணிப்பாளர்கள், ஆய்வாளர்கள், காவலர்கள் என அனைவருக்கும் அறிவுறுத்தியுள்ளோம். அதேபோல, தனக்கு கீழ் பணியாற்றும் காவலர் ஒருவர் லஞ்சம் வாங்கினால் உரிய நடவடிக்கை எடுக்க உயர் அதிகாரிகளுக்கு வலியுறுத்தியுள்ளோம். இந்த தொடர் நடவடிக்கைகள் மூலம் லஞ்சம் தவிர்க்கப்படும், என தெரிவித்தார்.