கோவை : விளாங்குறிச்சியில் வீட்டில் பெற்றோருடன் உறங்கி கொண்டிருந்த இரண்டரை வயது பெண் குழந்தை கிணற்றில் பிணமாக கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை : விளாங்குறிச்சியில் வீட்டில் பெற்றோருடன் உறங்கி கொண்டிருந்த இரண்டரை வயது பெண் குழந்தை கிணற்றில் பிணமாக கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அன்னூர் கரியகவுண்டனூர் பகுதியைச் சேர்ந்த தம்பதிகள் கனகராஜ் மற்றும் காஞ்சனா. இவர்கள் விளாங்குறிச்சியில் உள்ள குப்புராஜ் என்பவரது தோட்டத்தில் வாடகைக்கு வசித்து வருகின்றனர். இவர்களுக்கு இரண்டரை வயதில் பெண் குழந்தை உள்ளது. இவர்கள் நேற்று இரவு வழக்கம் போல உணவருந்தி விட்டு உறங்கச் சென்று விட்டனர். மேலும், வீட்டிற்கு வந்த உறவினர்களும் வீட்டின் வெளியே கட்டிலில் படுத்து இருந்தனர்.

இந்த நிலையில், இன்று அதிகாலை சுமார் நான்கரை மணியளவில் காஞ்சனா எழுந்து பார்த்தபோது, அருகில் படுத்திருந்த குழந்தையைக் காணாததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து, பெற்றோர்கள் வீட்டின் முன்பு தனது குழந்தை விளையாடிக் கொண்டு இருக்கும் என தேடிப்பார்த்தனர். ஆனால், குழந்தை எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

பின்னர், வீட்டிலிருந்து 500 மீட்டர் தொலைவில் கருவேலங் காட்டுப்பகுதியில் தேடிய போது பாழடைந்த கிணற்றில் குழந்தை கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே கிணற்றில் கயிற்றை கட்டி இறக்கி குழந்தையை தூக்கினர். குழந்தை மயங்கி இருப்பதாக நினைத்துத் தூக்கிக்கொண்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், குழந்தை இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக பீளமேடு போலீசார் வழக்குப் பதிவு செய்து வருகின்றனர்.
