கோவை : மருதமலை பகுதியில் சாலைகளில் சுற்றித்திரியும் காட்டுப் பன்றிகளால் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் அச்சமடைந்துள்ளனர்.
கோவை : மருதமலை பகுதியில் சாலைகளில் சுற்றித்திரியும் காட்டுப் பன்றிகளால் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் அச்சமடைந்துள்ளனர்.
அருள்மிகு முருகப் பெருமானின் ஏழாம் படை வீடு என கருதப்படுவது கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி திருக்கோவில். இத்திருக்கோவிலுக்கு தினந்தோறும் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் வந்து பெருமானை தரிசித்து செல்கின்றனர். மருதமலை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்து இருப்பதால் அங்கு அவ்வப்போது யானை, காட்டெருமை, சிறுத்தை, கரடி உள்ளிட்ட வன விலங்குகளும் வந்து செல்வது வாடிக்கையாக இருந்து வருகிறது.

இந்த நிலையில், காட்டுப்பன்றிகள் கோவிலுக்கு செல்லும் சாலையில் சாதாரணமாக சுற்றித் திரிவதும், சாலையோரங்களில் பக்தர்களால் வீசப்படும் தின்பண்டங்களை உண்பதும் அன்றாட நிகழ்வாகி இருக்கிறது. இதனால், ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டுவிடுமோ என பக்தர்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். மேலும், காட்டுப்பன்றியை பார்க்கும் சில இளைஞர்கள் அதன் அருகே நின்று செல்பி எடுத்து வருவதால், திடீரென பன்றிகள் தாக்கும் சூழலும் ஏற்பட்டுள்ளது. எனவே, வனத்துறையினர் இது குறித்து உரிய நடவடிக்கை மேற்கொண்டு காட்டுப் பன்றிகளின் நடமாட்டத்தை குறைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்களும், பக்தர்களும் கேட்டுக் கொண்டுள்ளனர்.
