கோவை : கோவை மாவட்டத்தில் 122 அங்கன்வாடி மையங்களில் தொடங்கப்பட்ட எல்.கே.ஜி. வகுப்புகளில் 1,182 மாணவர்கள் சேர்ந்துள்ள நிலையில், மாணவர்களின் பெற்றோர்கள் அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
கோவை : கோவை மாவட்டத்தில் 122 அங்கன்வாடி மையங்களில் தொடங்கப்பட்ட எல்.கே.ஜி. வகுப்புகளில் 1,182 மாணவர்கள் சேர்ந்துள்ள நிலையில், மாணவர்களின் பெற்றோர்கள் அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் 2,381 அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி., யூ.கே.ஜி. வகுப்புகளை தொடங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது. மூன்று ஆண்டுகளுக்கு சோதனை அடிப்படையில், இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. தமிழகத்தில் தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதையடுத்து, அங்கன்வாடி மையங்களுக்கு வரும் குழந்தைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யும் வகையில், மாண்டிசோரி கல்வி அடிப்படையிலான எல்.கே.ஜி மற்றும் யூ.கே.ஜி வகுப்புகளைத் தொடங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இது குறித்து சமூகநலம் மற்றும் ஊட்டச்சத்து உணவுத்திட்டத் துறை மூலம் மாவட்டங்களிலும் அரசு நடுநிலைப் பள்ளி வளாகங்களில் உள்ள 2,381 அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி, யூ.கே.ஜி வகுப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு குழந்தைக்கும் 4 ஜோடி சீருடைகள், ஒரு ஜோடி காலணிகள் வழங்கப்படும், மலைப்பகுதி குழந்தைகளுக்கு ஒரு ஸ்வெட்டர், மழைக்காலத்தில் பயன்படுத்தும் காலணி ஆகியவையும் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
எல்.கே.ஜி வகுப்பில் 3 முதல் 4 வயதான குழந்தைகளும், யூ.கே.ஜி வகுப்பில் 4 முதல் 5 வயதான குழந்தைகளும் சேர்க்கப்படுவார்கள். குழந்தைகளின் வருகை, கற்றுக் கொள்ளும் திறன் ஆகியவை குறித்து இடையிடையே மதிப்பீடு செய்யப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதனை தொடர்ந்து, தமிழக அரசின் அங்கன்வாடி மையங்களில், எல்.கே.ஜி, யூ.கே.ஜி, வகுப்புகள் தொடங்கியுள்ள நிலையில், பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை ஆர்வமுடன் சேர்த்து வருகின்றனர். ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித்திட்ட பணிகள் மூலம் கோவை மாவட்டத்தில் மொத்தம் 1,697 அங்கன் வாடி மையங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில், பள்ளிகளில் செயல்படும் 122 மையங்களில் 588 மாணவர்கள், 594 மாணவிகள் என மொத்தம் 1,182 மாணவ, மாணவியர்கள் 2019-2020 ஆம் கல்வியாண்டில் எல்.கே.ஜி. வகுப்பில் சேர்ந்து பயின்று வருகிறார்கள்.
இது தொடர்பாக மாணவர் ஒருவரின் தாயார் கூறுகையில், "தற்பொழுது நான் என் வீட்டின் அருகிலுள்ள அங்கன்வாடி மையத்தில் எல்.கே.ஜி., வகுப்பில் எனது மகனை சேர்த்துள்ளேன். தனியார் பள்ளிகளில் எல்.கே.ஜி. வகுப்பில் சேர்ப்பதென்றால் பல்லாயிரம் வரையிலான ரூபாய்கள் செலவாகும். ஆனால், நாங்கள் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், எங்களால் மேற்கண்ட தொகை செலுத்துவதது என்பது இயலாத காரியம்.
ஆனால், தற்போது தமிழக அரசு கொண்டு வந்துள்ள இத்திட்டத்தால் என் குழந்தையும் தனியார் பள்ளி குழந்தைகளுக்கு இணையான கல்வி பயிலுமுடியும், நல்ல தரமான கல்வியும் கிடைப்பதால் இத்திட்டத்தை செயல்படுத்திய தமிழக அரசுக்கும், தமிழ்நாடு முதலமைச்சருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியை எனது குடும்பத்தின் சார்பாக தெரிவித்துக் கொள்கிறேன்," எனத் தெரிவித்தார்.