கோவை : கோவை மாநகராட்சியின் வேண்டுகோளினை ஏற்று, கவுண்டம்பாளையம் அருகே உள்ள ஜீவா நகர் குடியிருப்புகளுக்கான மின்சாரத்தை மின்சார வாரிய ஊழியர்கள் நேற்று துண்டித்தனர்.
கோவை : கோவை மாநகராட்சியின் வேண்டுகோளினை ஏற்று, கவுண்டம்பாளையம் அருகே உள்ள ஜீவா நகர் குடியிருப்புகளுக்கான மின்சாரத்தை மின்சார வாரிய ஊழியர்கள் நேற்று துண்டித்தனர்.

கோவை மேட்டுப்பாளையம் சாலை அருகே உள்ள ஜீவா நகரில் கடந்த 40 ஆண்டுகளாக ஐநூறுக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள குடியிருப்புவாசிகளுக்கு கீரணத்தம் அருகே குடிசை மாற்று வாரியத்தின் மூலம் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. இங்குள்ள வீடுகளை காலி செய்து விட்டு கீரணத்தத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள வீடுகளுக்கு இடம்பெயருமாறு கோவை மாநகராட்சி கால அவகாசம் கொடுத்திருந்தது.
இருப்பினும், கடந்த பிப்ரவரி மாதம் ஜீவா நகரில் இருக்கும் வீடுகளை அப்புறப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், வீடுகளை அப்புறப்படுத்தும் பணிகளைக் கோவை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சியின் வேண்டுகோளினை ஏற்று, ஜீவா நகர் குடியிருப்புகளுக்கான மின்சாரத்தை மின்சார வாரிய ஊழியர்கள் நேற்று துண்டித்தனர்.

இது தொடர்பாக கோவை மாநகராட்சியின் துணை ஆணையர் பிரசன்ன ராமசாமி கூறுகையில், "கோவை மாநகராட்சி நிர்வாகம் உயர்நீதிமன்றத்தின் உத்தரவைத் தான் அமல்படுத்தி வருகிறது. இல்லையெனில், நீதிமன்ற அவமதிப்பாகிவிடும். குடிசை மாற்று வாரியத்தின் மூலம் கீரணத்தம் பகுதியில் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ள குடியிருப்புகளுக்கு இடம்பெயர ஜீவா நகர் குடியிருப்புவாசிகளுக்கு போதிய அவகாசம் வழங்கப்பட்டுவிட்டது. அவர்களில் வெறும் 130 குடும்பங்கள் மட்டுமே காலி செய்துள்ளனர். எஞ்சிய நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர், அதிகாரிகள் நேரடியாக சென்று காலி செய்ய வலியுறுத்தியும், காலி செய்ய மறுப்பு தெரிவித்து வருகின்றனர். எனவே, முதற்கட்டமாக, மின்விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது," என்றார்.

அவசர காலங்களில் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் வருவதற்கு தடையாக இருப்பதாகக் கூறி கே.கே. நகர் குடியிருப்பு நலச்சங்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவின் அடிப்படையில் ஜீவா நகர் குடியிருப்பை காலி செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இங்கிருந்து கீரணத்தம் பகுதிக்கு இடம்பெயரும் அப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக அவர்கள் கூறுகின்றனர். ஏனெனில், தினக் கூலிக்கு செல்லும் பொதுமக்கள் கீரணத்தம் பகுதியில் இருந்து நாள்தோறும் கோவை மாநகருக்கு வர நெடுந்தூரம் பயணிக்க வேண்டி உள்ளதே ஆகும்.