கோவை : அமைச்சர் எஸ்.பி வேலுமணி பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி கோவை மாநகராட்சியின் முன்பு தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க.வைச் சேர்ந்த சுமார் 400 பேர் கைது செய்யப்பட்டனர்.
கோவை : அமைச்சர் எஸ்.பி வேலுமணி பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி கோவை மாநகராட்சியின் முன்பு தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க.வைச் சேர்ந்த சுமார் 400 பேர் கைது செய்யப்பட்டனர்.

தமிழகம் முழுவதும் முறையாக குடிநீர் விநியோகத்தில் கவனம் செலுத்தாத அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி கோவை மாநகராட்சி அலுவலகம் முன்பு தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த காவல்துறையினரிடம் அனுமதி கோரப்பட்டிருந்தது. ஆனால், இதற்கு, கோவை மாநகர காவல்துறையினர் அனுமதி மறுத்திருந்தனர். இருப்பினும், தடையை மீறி அறிவிக்கப்பட்டதைப் போல எம்.எல்.ஏ. நா. கார்த்திக் தலைமையில் தி.மு.க.வினர் கோவை மாநகராட்சி அலுவலகம் முன்பு திரண்டனர். அப்போது, கோவை மாநகர காவல் ஆணையர் சுமித் சரண் போராட்டம் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும், கலைந்து செல்லும்படியும் அறிவுறுத்தினார்.

ஆனால், அவரது கோரிக்கையை ஏற்க மறுத்து தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், போராட்டத்தில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட சுமார் 400 பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் உக்கடம் அருகே உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அப்போது, எம்.எல்.ஏ. நா. கார்த்திக் பேசுகையில், "தமிழகம் முழுவதும் குடிநீர் திட்ட ஏற்பாடுகளை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி முறையாக செய்யவில்லை. எனவே, எஸ்.பி. வேலுமணி பதவி விலக வேண்டும். மேலும், சூயஸ் நிறுவனத்திற்கு தண்ணீர் விநியோகம் செய்யும் உரிமம் வழங்கப்படுவதால், பொதுக்குழாய்களே இல்லாமல் போய்விடும். இதனால், சாதாரண மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். எனவே, சூயஸ் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும்," என வலியுறுத்தினர்.

கோவை மாநகரின் மையப் பகுதியான கோவை மாநகராட்சியின் முன்பு அனுமதியின்றி தி.மு.க.வினர் நடத்திய போராட்டத்தால் அந்த சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், பெரும் பதற்றமும் ஏற்பட்டது.