கோவை : கோவை அரசு கலைக் கல்லூரி மாணவி தவறான சிகிச்சையால் பலியான நிலையில், பெற்றோரின் புகாரை ஏற்க மறுத்த செல்வபுரம் காவல் ஆய்வாளர் மற்றும் மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவை அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவை : கோவை அரசு கலைக் கல்லூரி மாணவி தவறான சிகிச்சையால் பலியான நிலையில், பெற்றோரின் புகாரை ஏற்க மறுத்த செல்வபுரம் காவல் ஆய்வாளர் மற்றும் மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவை அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவை மாவட்டத்தில் உள்ள கோவைபுதூர் நேதாஜி நகரைச் சேர்ந்த கணேசன் - மல்லிகா தம்பதியினரின் மகள் சத்யப்பிரியா (20). இவர் கோவை அரசு கலைக்கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் கடந்த சில மாதங்களாகவே மாதவிடாய் பிரச்சினையால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதையடுத்து, சத்யபிரியா தனியார் தொலைக்காட்சிகளில் பிரபலமாக விளம்பரங்களை செய்து வந்த செல்வபுரம் பகுதியில் உள்ள மனோன்மணி சித்த வைத்திய சாலையில் உறவினர்களின் அறிவுறுத்தலின் பேரில் சிகிச்சைக்காக சென்றுள்ளார். அங்கு மருத்துவர் குருநாதன் கொடுத்த மருந்துகளை சுமார் ஆறு மாதங்களாக பயன்படுத்தி வந்துள்ளார்.

ஆனால் இந்த மருந்துகள் சத்திய பிரியாவுக்கு ஒத்துப் போகவில்லை. சத்ய பிரியாவின் உடல் நிலையை பாதிப்படைய செய்தது. மிகவும் உடல்நிலை மோசமான நிலையில் சத்யபிரியா கடந்த ஏப்ரல் 22-ம் தேதி கோவை அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார்.
இதனிடையே, மாணவியின் உடல்நிலை பாதிப்புக்கு காரணம் மருத்துவரின் தவறான மருந்து என சத்யபிரியாவின் பெற்றோர் கடந்த மே 1-ம் தேதி செல்வபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். ஆனால், காவல் நிலையத்தில் நடவடிக்கை எடுக்காததால் மே 31-ஆம் தேதி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

இந்த நிலையில், நேற்று அதிகாலை 2 மணிக்கு சத்யபிரியா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து, உறவினர்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இப்படி இருக்க தற்போது கோவை அரசு கலைக் கல்லூரி மாணவர்கள், காவல் ஆய்வாளர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல, மருத்துவர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்காதது சந்தேகத்தை எழுப்புவதாக உள்ளது எனவும் தெரிவித்துள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற மாணவ, மாணவிகள் காவல்துறைக்கு எதிராக கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.