கோவை : கோவையில் இஸ்லாமிய இளைஞர்களின் வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தொடர்ந்து சோதனை நடத்தி வரும் நிலையில், இஸ்லாம் சமூகத்தை குறிவைப்பதை என்.ஐ.ஏ. நிறுத்த வேண்டும் என பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
கோவை : கோவையில் இஸ்லாமிய இளைஞர்களின் வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தொடர்ந்து சோதனை நடத்தி வரும் நிலையில், இஸ்லாம் சமூகத்தை குறிவைப்பதை என்.ஐ.ஏ. நிறுத்த வேண்டும் என பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது :- விசாரணை என்ற பெயரில் தமிழகத்தின் பல பகுதிகளில் முஸ்லிம்களை தேசிய புலனாய்வு முகமையான என்.ஐ.ஏ. தொடர்ந்து குறிவைக்கும் போக்கை நிறுத்த வேண்டும். மத்திய பா.ஜ.க., அரசின் செயல் திட்டங்களை நடைமுறைப் படுத்தும் அமைப்பாகவே என்.ஐ.ஏ. செயல்பட்டு வருகிறது என்ற குற்றச்சாட்டை நிரூபிக்கும் வகையிலான செயல்பாடுகளையே என்.ஐ.ஏ. முன்னெடுத்து வருகின்றது.
சமீப ஆண்டுகளில் தமிழகத்தில் அதிகமான வழக்குகளை கையில் எடுத்துள்ள என்.ஐ.ஏ. தொடர்ந்து முஸ்லிம்களை மட்டுமே தனது விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, சமீபத்தில் கோவையில் பல இடங்களில் சோதனைகளை நடத்தி சில முஸ்லிம் இளைஞர்களையும் என்.ஐ.ஏ. கைது செய்துள்ளது. அதனைத் தொடர்ந்து, மதுரையிலும் சோதனைகளை நடத்தியுள்ளது. இலங்கையில் நடத்தப்பட்ட ஈஸ்டர் தின குண்டுவெடிப்பு, வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ்.உடன் தொடர்பு ஆகிய காரணங்களை கூறி இந்த சோதனைகளையும், கைதுகளையும் என்.ஐ.ஏ. நடத்தியுள்ளது. விசாரணை என்ற பெயரில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் மேற்கொள்ளும் அத்துமீறல்களையும், ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தையும் குற்றவாளிகளாக சித்திரிப்பதையும் பாப்புலர் ஃப்ரண்ட் வன்மையாக கண்டிக்கிறது. இரவு நேரங்களில் சோதனை நடத்தி வீடுகளிலுள்ள பெண்களையும், குழந்தைகளையும் அச்சப்படுத்தி வருவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. மனித உரிமைகளுக்கு எதிரான இந்த சோதனையில் சிம் கார்டுகள் மற்றும் பென் டிரைவ்களை கைப்பற்றியதை சாதனை போல் குறிப்பிடுகின்றனர்.
அத்துடன் பாப்புலர் ஃப்ரண்டின் சில துண்டுப் பிரசுரங்களையும் கைப்பற்றியதாக தனது செய்திக் குறிப்பில் என்.ஐ.ஏ. குறிப்பிட்டுள்ளது. பாப்புலர் ஃப்ரண்டின் துண்டுப் பிரசுரங்களை அச்சிடுவதோ, விநியோகம் செய்திடுவதோ ம்சட்டவிரோத செயல் இல்லை என்பதை என்.ஐ.ஏ. அதிகாரிகள் உணர்ந்து கொள்ள வேண்டும். பாப்புலர் ஃப்ரண்டின் பணிகளை குறித்த துண்டுப் பிரசுரங்கள் இந்தியா முழுவதும் அனைத்து தரப்பு மக்களிடமும் தொடர்ந்து இலட்சக்கணக்கில் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. நடத்தப்பட்ட சோதனைகள் மற்றும் கைதுகளுடன் எப்படியேனும் பாப்புலர் ஃப்ரண்டை தொடர்புபடுத்த வேண்டும் என்ற என்.ஐ.ஏ.வின் விஷமத்தனமான எண்ணத்தைதான் இது வெளிப்படுத்துகின்றது.
தொடர்ந்து முஸ்லிம்களை மட்டுமே குறிவைத்து வரும் என்.ஐ.ஏ. அமைப்பு இந்துத்துவ பயங்கரவாதிகள் தொடர்புடைய குண்டுவெடிப்பு வழக்குகளில் முறையான எந்த விசாரணையும் நடத்துவதில்லை. இதனால், அந்த வழக்குகளிலிருந்து இந்துத்துவ பயங்கரவாதிகள் ஒவ்வொருவராக விடுதலை செய்யப்பட்டும் வருகின்றனர். அத்துடன் மாநில அரசுகளின் சுயாட்சியை பறித்து மாநில காவல்துறையின் திறமையை கேள்விக்குள்ளாக்கும் செயலாகவும் என்.ஐ.ஏ. வின் இந்த நடவடிக்கை அமைந்துள்ளது. எனவே, என்.ஐ.ஏ. அமைப்பினை கலைக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஜனநாயக சக்திகள் தொடர்ந்து முன்வைத்து வருகின்றனர். விசாரணை என்ற பெயரில் அனைத்து முஸ்லிம்களையும் குற்றவாளிகளாக சித்தரித்து இரவு நேரங்களில் வீடுகளுக்குள் புகுந்து தொடர்ந்து மனித உரிமை மீறல் சம்பவத்தில் ஈடுபடும் என்.ஐ.ஏ.வின் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த வேண்டும் என்று பாப்புலர் ஃப்ரண்ட் தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது, எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.