கோவை : கோவையில் மோசடியில் ஈடுபட்ட சிட்பண்ட் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஆடையர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தியவர்களை போலீசார் கைது செய்தனர்.
கோவை : கோவையில் மோசடியில் ஈடுபட்ட சிட்பண்ட் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தியவர்களை போலீசார் கைது செய்தனர்.

காந்திபுரம் 100 அடி சாலயில் இயங்கி வரும் முல்லை ஜூவல்லரி சிட்பண்ட் நிறுவனத்தை குறிஞ்சி என்பவர் நடத்தி வருகிறார். அவர் தங்களது நிறுவனத்தில் முதலீடு செயதால் இரட்டிப்பு பணம் தரப்படும் என அறிவித்து இருந்தார். இதனை நம்பி ஏராளமானோர் பணம் செலுத்தி உள்ளனர். ஆனால், பணம் முதலீடு செய்தவர்களுக்கு பணம் தராமல் ஏமாற்றியதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து, கடந்த சில வாரங்களுக்கு முன்பு அலுவலகத்தை முற்றுகையிட்டு அங்கு பணிபுரியும் பெண் ஊழியர்களை சிறைபடுத்தினர். 1,000க்கும் மேற்பட்டோர் இதில் முதலீடு செய்து உள்ளதாகவும், 500 கோடி ரூபாய் வரை மோசடி செய்துள்ளதாக குற்றம் சாட்டியவர்கள், பணத்தை திருப்பி கேட்டபோது தனக்கு கல்வித்துறை அமைச்சரை நன்கு தெரியும் எனவும், அரசியல் பின்புலம் இருப்பதால் என்னை ஒன்றும் செய்ய முடியாது என கூறி ஆட்களை வைத்து மிரட்டுவதாக தெரிவித்தனர்.

இந்நிலையில், அங்கு வந்த காவல்துறையினர், சிறைபிடித்த பெண் ஊழியர்களை மீட்டனர். பின்னர், சிட்பண்ட் நிறுவனத்தை முற்றுகையிட்டவர்களுடன் சமாதான பேச்சு நடத்தி, உரிமையாளர் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில், அவர்கள் கலைந்து சென்றனர்.

சிட்பண்ட் நிறுவனத்தால் பாதிக்கப்பட்டவர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மனு அளிக்க வந்தவர்கள், திடீரென கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். குறிஞ்சி சிட் பண்ட் நிறுவனம் உரிமையாளரை கைது செய்து பணத்தை திரும்ப கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷமிட்டனர். இதையடுத்து, அனுமதியின்றி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அவர்களை போலீசார் கைது செய்தனர்.