கோவை : மேட்டுப்பாளையம் அருகே சரக்கு வாகனமும் இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் தந்தை, மகள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை : மேட்டுப்பாளையம் அருகே சரக்கு வாகனமும் இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் தந்தை, மகள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிறுமுகை திம்மராயம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ் (42) மற்றும் செளமியா(26) தம்பதியினர். இவர்களுக்கு, கெளசிகா(7) மற்றும் நித்தின்(9) ஆகிய இரு குழந்தைகள் உள்ளனர். இவர்கள் நால்வரும் இன்று மாலை மேட்டுப்பாளையத்திற்கு உறவினர் ஒருவரின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்று விட்டு இன்று மாலை திம்மராயம்பாளையம் செல்வதற்காக சிறுமுகை சாலை வழியே இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்துள்ளனர். அப்போது, ஆலாங்கொம்பு தண்ணீர் தடம் அருகே வந்த போது சாலையின், எதிரே சிறுமுகையில் இருந்து வாழைக்கன்று ஏற்றி வந்த பிக்கப் சரக்கு வாகனத்தில் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இதில், இருசக்கர வாகனத்தில் வந்த நால்வரும் தூக்கி வீசப்பட்டனர். குறிப்பாக, இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த வெங்கடேஷ் மற்றும் அவரது 7 வயது மகள் கெளசிகா தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும், படுகாயமடைந்த மனைவி செளமியா மற்றும் அவரது மகன் நித்தின் ஆகியோரை அருகில் இருந்தவர்கள் மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். பிக்கப் வாகனத்தை ஓட்டி வந்த ஓட்டுநர் அங்கேயே நிறுத்தி விட்டு ஓடிய நிலையில், விபத்து குறித்து சிறுமுகை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.