கோவை : திருமலையம்பாளையம் பேரூராட்சியில் ரூ.1.3 கோடி மதிப்பில் போடப்பட்டு வரும் தார் சாலைகளை கோவை மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி நேரில் ஆய்வு கொண்டார்.
கோவை : திருமலையம்பாளையம் பேரூராட்சியில் ரூ.1.3 கோடி மதிப்பில் போடப்பட்டு வரும் தார் சாலைகளை கோவை மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி நேரில் ஆய்வு கொண்டார்.
கோவை மாவட்டம் திருமலையம்பாளையம் பேரூராட்சியில் ரூ.1.3 கோடி மதிப்பில் மாரிச்செட்டிபதி முதல் காரைகவுண்டர் தோட்டம் வரை 2.4 கி.மீ. நீளம் தார்சாலை அமைக்கும் பணியினை மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி இன்று நேரில் பார்வையிட்டு களஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது, உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) துவாரகநாத்சிங், வட்டாட்சியர் பழனிசாமி, பேரூராட்சி செயல் அலுவலர்கள் எஸ்.கே.எம்.காதர் ஆகியோர் கலந்து கொண்டனர். இவ்வாய்வில், சாலையினை முதல் இரண்டு அடுக்குகளை துளையிட்டு மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் அவர் தெரிவித்ததாவது :- கோவை மாவட்டத்தின் நகர்ப்புற கிராமப்புற மற்றும் பேரூராட்சிப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் தொகைக்கு ஏற்ப உள்ளாட்சித் துறையின் மூலம் ஒருங்கிணைந்த நகர்புற வளர்ச்சித் திட்டத்தின் கீழ் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள், குடிநீர் குழாய்கள் பொருத்துதல், மழைநீர் வடிகால் அமைத்தல், சாலைவசதிகள், தெருவிளக்கு உள்ளிட்ட பல்வேறு உட்கட்டமைப்பு மற்றும் அடிப்படை கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதன்படி, கிராமப்பகுதிகளின் தார்சாலைகள், நகர்ப்பகுதிகளின் தார்சாலைகளுக்கு நிகராகவும், சாலையோரங்களின் மரங்கள் நடப்பட்டு பசுமை வழிச்சாலைகளாகவும் அமைக்கப்பட்டு வருகின்றது. அதுமட்டுமல்லாமல், அனைத்து தரப்பு மக்களுக்கும் தங்குதடையின்றி குடிநீர் சேவைகள், கிராமப்புறங்களில் சிறுவர் பூங்காக்கள் என அனைத்து வசதிகளிலும் நகர்ப்பகுதிகளைக் காட்டிலும், கிராமப்புறங்களில் தன்னிறைவு பெற்ற பகுதிகளாக கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து பேரூராட்சிகள் விளங்கி வருகின்றது.
மக்களுக்காக அரசு செயல்படுத்தி வரும் அடிப்படை கட்டமைப்பு பணிகள் அனைத்தும் உரியமுறையில் மக்களுக்கு நலன் பயப்பவையாக சென்று சேர வேண்டும். மாவட்டம் முழுவதிலும் இதுபோன்ற கள ஆய்வுகள் தொடர்ந்து நடைபெறும். எனவே, வளர்ச்சித் திட்டப்பணிகளில் ஈடுபடும் அலுவலர்கள் அனைவரும், தங்களின் பணிகளின் தன்மையறிந்து அர்ப்பணிப்புடன் பணியாற்றிட அன்புடன் கேட்டுக்கொள்கிறேன், என மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி தெரிவித்தார்.
தொடர்ந்து, குட்டிக்கவுண்டன்பதி நியாய விலைக்கடையில் பொது வினியோகத் திட்டத்தின்படி, பொருட்களின் தரம் மற்றும் இருப்பு குறித்தும் நியாய விலைக்கடை பணியாளரிடம் ஆய்வு மேற்கொண்டதுடன் பொதுமக்களிடமும், உரியமுறையில் பொதுவிநியோக திட்டப் பொருட்கள் வழங்கப்படுகின்றனவா..? என கேட்டறிந்தார்.