கோவை : தொழில்களை பாதுகாத்தால்தான் தொழிலாளிகளை பாதுகாக்க முடியும் என்பதை உணர்ந்த தொழிற்சங்கவாதி என்பதால், கோவை தொழில்களை பாதுகாப்பதில் முனைப்பு காட்டுவேன் என தொழில் வர்த்தக சபையின் பாராட்டு விழா நிகழ்ச்சியில் எம்.பி., பி.ஆர். நடராஜன் தெரிவித்தார்.
கோவை : தொழில்களை பாதுகாத்தால்தான் தொழிலாளிகளை பாதுகாக்க முடியும் என்பதை உணர்ந்த தொழிற்சங்கவாதி என்பதால், கோவை தொழில்களை பாதுகாப்பதில் முனைப்பு காட்டுவேன் என இந்திய தொழில் வர்த்தக சபையின் பாராட்டு விழா நிகழ்ச்சியில் எம்.பி., பி.ஆர். நடராஜன் தெரிவித்தார்.
நாடாளுமன்ற தேர்தலில் கோவை தொகுதியில் வெற்றி பெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜனுக்கு தொழில் வர்த்தக சபை சார்பில் இன்று பாராட்டு விழா நடைபெற்றது. அவிநாசி சாலையில் உள்ள கொடிசியா தொழில் வர்த்தக சபை சேம்பரில் நடைபெற்ற இந்த பாராட்டு விழா கூட்டத்திற்கு தொழில் வர்த்தக சபை தலைவர் லஷ்மிநாராயணன் தலைமை தாங்கினார். இந்த நிகழ்ச்சியில், 50-க்கும் மேற்பட்ட சிறுகுறு தொழில் அமைப்பின் நிர்வாகிகள் பங்கேற்று எம்.பி., பி.ஆர். நடராஜனுக்கு சால்வை மற்றும் பூங்கொத்து கொடுத்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இதனைத்தொடர்ந்து, தொழில் வர்த்தக சபை தலைவர் லஷ்மிநாராயணன் தலைமையேற்று உரையாற்றிய போது, பி.ஆர். நடராஜன் முன்னர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் கோவைக்கு 11 புதிய ரயில்களைப் பெற்றுக் கொடுத்ததும், கோவை ரயில்நிலையத்தில் நிற்காமல் போத்தனூர் வழியாக கேரளா சென்ற ரயில்களை கோவை ரயில் நிலையத்தில் வந்து நிற்க வைத்தது, கோவை ரயில் நிலையத்தை தரம் உயர்த்தியது உள்ளிட்ட பணிகளை நினைவு கூர்ந்தார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், "தொழில் அமைப்புகள் சிறுகுறு தொழில்களுக்கு விதிக்கப்பட்டுள்ள அதிகபட்ச ஜி.எஸ்.டி. வரியை 5 சதவீதமாக மாற்றி அமைக்க வேண்டும் என்கிற கோரிக்கையை எழுப்பிய நிலையில், நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் நமது பிரச்சனைகளை முழுமையாக உணர்ந்த பி.ஆர். நடராஜன் ஜாப் ஆர்டர்களுக்கு அறவே ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு கூடாது, உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களுக்கு குறைந்தபட்ச ஜி.எஸ்.டி. வரியை நிர்ணயிக்க வேண்டும் என தேர்தல் பிரச்சாரத்தில் வலுவாக எடுத்து சென்றார். தற்போது வெற்றி பெற்று கோவை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பி.ஆர். நடராஜனுக்கு தொழில் வர்த்தக சபை சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்," என்றார். இதனையடுத்து, தொழில் வர்த்தக சபை சார்பில் கோவை மாவட்டத்தின் வளர்ச்சிக்கான கோரிக்கை மனுவை நிர்வாகிகள் வழங்கினர்.
இதனையடுத்து, ஏற்புரையாற்றிய பி.ஆர். நடராஜன் எம்.பி. பேசியதாவது :- மத்திய அரசின் ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு கொள்கையால் சிறுகுறு தொழில்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை முழுமையாக உணர்ந்ததாலே, இந்த வரிவிதிப்பிற்கு எதிராக நாங்கள் போராடினோம். தொழிற்சங்கவாதி என்கிற முறையில் தொழிலாளர்களுக்கான ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று உங்களின் எதிர்புறம் நின்று நாங்கள் போராடுபவர்கள்தான். அதேநேரத்தில், பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் இந்த தொழில்கள் இருந்தால்தான், தொழிலாளிகளைப் பாதுகாக்க முடியும் என்பதை உணர்ந்தவர்கள் நாங்கள். ஆகவே, கோவை தொழில்களைப் பாதுகாக்க முனைப்போடு செயல்படுவோம்.

முன்னரே நாங்கள் சொன்னது போல ஜாப் ஆர்டர்களுக்கு ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு அறவே கூடாது என்பதில் உறுதியோடு நின்று நாடாளுமன்றத்தில் அழுத்தமான குரலை எழுப்புவேன். வரிவிதிப்பு இல்லாமல் அரசை நடத்த முடியாது என்பதும் நாங்கள் அறிவோம். ஆகவே, உற்பத்தி செய்யப்பட்டு முழுமையடைந்த பொருட்களுக்கு குறைந்தபட்ச ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிறோம்.
இதேபோல, கோவை மாவட்டத்தின் வளர்ச்சிக்காக வருகிற ஐந்தாண்டுகள் எனது நாடாளுமன்ற பணியை முழுமையாகப் பயன்படுத்துவேன். கோவை - பெங்களூர் இரவு நேர ரயில், கோவை - மதுரை ரயில் மற்றும் கோவை ரயில் நிலையத்தில் மூன்றாவது வழித்தடம் உள்ளிட்டவற்றுக்காக ரயில்வே அதிகாரிகளை சந்தித்து முறையிட்டுள்ளேன். தொடர்ந்து இக்கோரிக்கைகளை வென்றெடுக்க உழைப்பேன். விமானநிலைய விரிவாக்கம், மெட்ரோ ரயில் சேவை ஆகிய திட்டங்களுக்கு தொழில்துறையினரின் ஆலோசனையும், முழுமையான உதவியையும் பெற்று மாவட்டத்தின் வளர்ச்சியில் முழுமையான பங்கினை ஆற்றுவேன், என உரையாற்றினார்.