கோவை : குழந்தை தொழிலாளர் நலத்துறை சார்பில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
கோவை : குழந்தை தொழிலாளர் நலத்துறை சார்பில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

குழந்தை தொழிலாளர் நலத்துறை, சமூக நலத்துறை, கல்வித்துறை சார்பில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து தொடங்கிய இந்தப் பேரணியை, மாவட்ட வருவாய் அலுவலர் ராம துரைமுருகன் துவங்கி வைத்தார்.

14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை அபாயகர தொழில்களில் வேலைக்கு அமர்த்தக்கூடாது என்றும், குழந்தை தொழிலாளர்கள், படிப்பை பாதியில் நிறுத்தியவர்களை, வேலையில் சேர்க்கக் கூடாது எனவும் அதிகாரிகள் கூறினர். மேலும், அது போன்றவர்களை குழந்தை தொழிலாளர் நலப்பள்ளி அல்லது பிற பள்ளிகளில் கல்வி பயில அனுமதிக்க வேண்டும் என்றும் குழந்தை தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தினால் 20 ஆயிரம் ரூபாய் அபராதம், இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதிக்க நேரிடும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

இந்தப் பேரணியில் 500-க்கும் மேற்பட்ட பல்வேறு கல்வி நிறுவன மாணவ, மாணவியர்கள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி பேரணியில் கலந்து கொண்டனர்.

இதனிடையே, கோவை மாநகராட்சியின் பிரதான அலுவலக வளாகத்தில் உள்ள விக்டோரியா ஹால் வளாகத்தில் குழந்தைத் தொழிலாளர் முறையினை அகற்றுவதற்கான உறுதிமொழியினை மாநகராட்சி துணை ஆணையர் ச. பிரசன்னா ராமசாமி தலைமையில் அனைத்து அலுவலர்களும், பணியாளர்களும் ஏற்றுக் கொண்டனர்.