கோவை : கோவை மாவட்டத்தில் இரவு நேரங்களில் ஏற்படும் விபத்துக்களை கட்டுப்படுத்தும் முயற்சியில், மாவட்ட காவல்துறையும், ஊர்க்காவல் படையினரும் இணைந்து கனரக வாகன ஓட்டிகளுக்கு அதிகாலை 2 மணி முதல் 4 மணிவரை தேநீரும், அறிவுரையும் வழங்கினர்.
கோவை : கோவை மாவட்டத்தில் இரவு நேரங்களில் ஏற்படும் விபத்துக்களை கட்டுப்படுத்தும் முயற்சியில், மாவட்ட காவல்துறையும், ஊர்க்காவல் படையினரும் இணைந்து கனரக வாகன ஓட்டிகளுக்கு அதிகாலை 2 மணி முதல் 4 மணிவரை தேநீரும், அறிவுரையும் வழங்கினர்.
கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி சாலை, மேட்டுப்பாளையம் சாலை, பாலக்காடு சாலை உள்ளிட்ட பல்வேறு சாலைகளில் விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதுவும் நள்ளிரவு 12 மணிக்கு மேல்தான் அதிக விபத்துக்கள் ஏற்படுகிறது. குறிப்பாக, லாரி ஓட்டுநர்கள், வெகு தூரத்தில் இருந்து பயணித்து வரும் பேருந்து ஓட்டுநர்கள் உள்ளிட்ட பல்வேறு ஓட்டுநர்கள் தூக்க கலக்கத்தில் வாகனத்தை செலுத்தி விபத்துக்கு வழி வகுக்கின்றனர். இப்படி இரவு நேரங்களில் நடைபெறும் விபத்துக்களை கட்டுப்படுத்த இரவு நேரங்களில் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு மதுபோதையில் வாகனம் ஓட்டுகின்றனரா எனவும் கண்காணிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமாரின் உத்தரவின் பேரில் ஒரு புது முயற்சியாக மாவட்ட காவல் துறையினரும், மாவட்ட ஊர்க்காவல் படையினரும் இணைந்து பொள்ளாச்சியில் உள்ள உஞ்சவேலம்பட்டி பகுதியைக் கடக்கும் கனரக வாகன ஓட்டுநர்களுக்கு அதிகாலை 2 மணி முதல் 4 மணிவரை தேநீர் அளித்தும் விபத்தில்லா சாலைகளை உருவாக்க தகுந்த அறிவுரைகளும் வழங்கப்பட்டது. இடைவெளியில்லாமல் வாகனங்களை இயக்கி வரும் வாகன ஓட்டுநர்களுக்கு அறிவுரையுடன் தேநீர் வழங்கப்படுவது விபத்துக்களை தடுக்க வழிவகுக்கும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த நிகழ்வில் மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சிவக்குமார், கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் வெங்கட்ராமன், ஊர்க்காவல் படையின் பிரதேச தளபதி பாலாஜி ராஜூ மற்றும் துணை தளபதி வித்யா ஸ்ரீ என பலர் கலந்து கொண்டனர்.