கோவை : அண்டை மாநிலமான கேரளாவில் நிபா காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதையடுத்து, கோவை மாவட்ட அரசு மருத்துவமனையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிரத்யேக வார்டு அமைக்கப்பட்டுள்ளது.
கோவை : அண்டை மாநிலமான கேரளாவில் நிபா காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதையடுத்து, கோவை மாவட்ட அரசு மருத்துவமனையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிரத்யேக வார்டு அமைக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் கடந்த ஆண்டு நிபா வைரஸ் தாக்கி பொதுமக்கள் சிரமம் அடைந்த நிலையில் தற்போது மீண்டும் நிபா காய்ச்சல் பாதிப்பு துவங்கியுள்ளது. எர்ணாகுளம் மாவட்டம் வடக்கு பரவூரைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர் இடுக்கி மாவட்டம் தொடுபுழாவில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அந்த மாணவர் தலைவலி, வாந்தி போன்றவற்றால் அவதிப்பட்டதால் நிபா வைரஸ் பாதிப்பு இருக்குமோ என்ற சந்தேகத்தில், அவரது இரத்த மாதிரிகள் புனேவில் உள்ள தேசிய வைராலஜி பரிசோதனை மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர், அவருக்கு நிபா வைரஸ் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.
இதையடுத்து, அந்த மாணவரை தனி வார்டில் வைத்து சிகிச்சை அளித்து வருகின்றனர். அதேபோல, அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் அவருடன் நெருங்கிய நபர்கள் என அனைவரும் மருத்துவ கண்காணிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
கேரளாவில் இந்த நோயானது கடந்த ஆண்டு பரவியது. இதையடுத்து, சுகாதாரத் துறையினர் தீவிர முயற்சியால் நோய் கட்டுப்படுத்தப்பட்டது. இந்த நிலையில், மீண்டும் நிபா வைரஸின் தாக்கம் கேரளாவில் தென்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தில் பொது சுகாதாரத்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக, கேரள மாநில எல்லைப் பகுதிகளில் தமிழக சுகாதாரத் துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல, கோவை அரசு மருத்துவமனையில் நிபா வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டால் சிகிச்சை கொடுக்க சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதல்வர் டாக்டர் அசோகன் கூறியதாவது :-

அண்டை மாநிலமான கேரளாவில் ஒருவர் நிபா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதால், தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பொது சுகாதாரத்துறையும் கால்நடை பராமரிப்புத் துறையும் மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, எல்லைப் பகுதிகளில் முன் எச்சரிக்கை பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். நிபா வைரஸானது வௌவால் எச்சங்கள் மூலம் பரவுவதால் பனை, தென்னை மரம் ஏறுபவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அவர்கள் மரத்தில் ஏறும் பொழுது, வௌவாலின் எச்சத்தினால் வைரஸ் தாக்க வாய்ப்புகள் உள்ளது. அதேபோல, பறவைகள் கடித்த பழங்களை உண்ண வேண்டாம். பழங்களை நன்றாக கழுவி சாப்பிட வேண்டும். அதேபோல, நோய்த்தொற்றுகள் பாதிக்கப்படாமல் இருக்க கை கழுவும் பழக்கத்தைப் பின்பற்ற வேண்டும்.
நிபா வைரஸ் தாக்கப்பட்ட அறிகுறிகளான தொண்டை வலி, அதிக உடல் வலி, மூச்சு விட சிரமம் ஆகிய அறிகுறிகள் ஏற்பட்டால் பொதுமக்கள் உடனடியாக அரசு மருத்துவமனைகளை நாடி சிகிச்சைக்கு உட்பட வேண்டும். மேலும், சந்தேகிக்கப்படும் நபர்களை மருத்துவர் இரத்த பரிசோதனைக்கு உட்படுத்துவார்.

இந்த சோதனை அனைவருக்கும் எடுக்க வேண்டும் என்ற அவசியமில்லை. மருத்துவர்கள் அதை தேவைப்படும் பட்சத்தில் செய்வார்கள். மேலும், இந்த நிபா சோதனைகள் புனேவில் உள்ள தேசிய வைராலஜி ஆராய்ச்சி மையம் மூலம் செய்யப்படும். நிபா வைரஸ் தாக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் நோயாளிகளைக் குறித்த தகவல்கள் தர அனைத்து தனியார் மருத்துவமனைகளுக்கும் சுகாதாரத்துறை சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
கோவையில் இதுவரை யாரும் நிபா வைரஸால் பாதிக்கப்படவில்லை. இருப்பினும், கோவை அரசு மருத்துவமனையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிரத்யேக வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

இதில், ஆண்களுக்கு 20 படுக்கைகள், பெண்களுக்கு 10 படுக்கைகள் என அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது. இந்த வைரஸால் பாதிக்கப்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை மருந்துகள் என்ற ஒன்று இல்லை. இந்த நோய் வராமல் தடுக்க முன்னெச்சரிக்கையாக இருப்பது நலம். அதேபோல, தமிழகத்தைப் பொறுத்தவரை பொதுமக்கள் யாரும் பீதியடைய வேண்டாம், என தெரிவித்தார்.