கோவை : சித்தாபுதூர் அருகே பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில், புதரில் கிடந்த குழந்தையை மீட்ட போலீசார், குழந்தையின் தாய் யார்..? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை : சித்தாபுதூர் அருகே பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில், புதரில் கிடந்த குழந்தையை மீட்ட போலீசார், குழந்தையின் தாய் யார்..? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகத்தில் கடந்த சில வருடங்களாகவே பிறந்த குழந்தைகள் சாலை ஓரங்களிலும் குப்பைத் தொட்டிகளிலும் தூக்கி வீசிச் செல்லும் நிலைமை அதிகரித்து விடுகிறது. இதில், ஒரு சிலர் குடும்ப சூழலை காரணம் காட்டி இந்த கொடும்பாவச் செயலில் ஈடுபடுகின்றனர். இன்னும், சிலர் தகாத உறவின் காரணமாக பிறந்த குழந்தையை தூக்கி எறிந்து செல்கின்றனர்.

இந்த நிலையில், இன்று கோவை காந்திபுரம் அருகே உள்ள சித்தாபுதூர் பகுதியில் இருக்கும் அன்னபூர்ணா லே-அவுட்டில் உள்ள குடியிருப்பு பகுதியில் இன்று காலை ஒரு குழந்தையின் அழுகுரல் சத்தம் கேட்டுள்ளது. இதையடுத்து, அருகில் இருந்தவர்கள் சென்று அங்குள்ள புதரில் பார்த்த பொழுது பிறந்த குழந்தை ஒன்று அழுதுக் கொண்டிருந்தது. பின்னர், இது குறித்து அருகே இருந்தவர்கள் காட்டூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், விரைந்து வந்த போலீசார் குழந்தையை மீட்டனர்.
இதனிடையே, போலீசார் நடத்திய விசாரணையில் மனோன்மணி என்பவர்களது இல்லத்தில் நேற்று இரவு கோத்தகிரியை சேர்ந்த இலக்கியா என்கிற திருமணமாகாத பெண் தங்கியுள்ளது தெரியவந்துள்ளது. இந்த நிலையில், இலக்கியாவுக்கு திடீரென உடல்நிலை சரியில்லை என மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த மனோன்மணி, குழந்தை பிறந்தது பற்றி தனக்கு தெரியவில்லை என மறுப்பு தெரிவித்துள்ளார். இதையடுத்து, போலீசார் மனோன்மணியிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அந்தப் பெண்ணையும் விசாரணை செய்து வருகின்றனர். இதையடுத்து, இந்த குழந்தை கோவை அரசு மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.