கோவை : புலியகுளம் அருகே உள்ள ஜெனிசிஸ் மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணிக்கு வாட்ஸ்அப் மூலம் மருத்துவர் சிகிச்சை கொடுத்ததால், பிறந்த குழந்தையின் உயிருக்கு ஆபத்தான சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், மருத்துவமனையின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கோவை : புலியகுளம் அருகே உள்ள ஜெனிசிஸ் மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணிக்கு வாட்ஸ்அப் மூலம் மருத்துவர் சிகிச்சை கொடுத்ததால், பிறந்த குழந்தையின் உயிருக்கு ஆபத்தான சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், மருத்துவமனையின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
ரத்தினபுரி அருகே வசித்து வருபவர் ரங்கராஜ் மற்றும் நித்யா தம்பதியினர். இவர் ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் தனது மனைவிக்கு ஜெனிசிஸ் மருத்துவமனையில் மகப்பேறு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில், கடந்த 1-ந் தேதி பிரசவத்திற்காக சிகிச்சை அளிக்க அனுமதித்துள்ளனர். ஆனால், பிரசவத்திற்கான சிகிச்சை அளிக்கும் பொழுது மருத்துவர் சந்திரகலா இல்லாமல், உதவி மருத்துவர்கள் மட்டுமே இருந்துள்ளனர். மேலும், முதலில் மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கும் பொழுது முதன்மை மருத்துவர் சந்திராவிற்கு வாட்ஸ்அப் மூலம் தகவல்களை புகைப்படங்களாக அனுப்பி, விவரங்களைக் கேட்டறிந்து சிகிச்சை அளித்துள்ளனர்.

பின்னர், குழந்தையின் உயிருக்கு பாதிப்பு ஏற்பட்டு விட்டது. இதையடுத்து, மருத்துவர்கள் அவர்களுக்கு சாதகமான தனியார் மருத்துவமனைக்கு குழந்தையை அழைத்துச் சென்றுவிட்டனர். இந்த நிலையில், தற்போது குழந்தையின் உயிருக்கு ஆபத்தான சூழல் உள்ளது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளதால், அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் ஜெனிசிஸ் மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து, மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் ராமநாதபுரம் காவல்துறையினர் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, எழுத்துப்பூர்வமாக புகார் அளிக்கும் படியும், இது குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக குழந்தையின் தாய் நித்தியா கூறியதாவது :- மருத்துவமனையின் அலட்சியத்தினால் எங்களது குழந்தை உயிருக்கு ஆபத்தான சூழலில் உள்ளது. பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் செவிலியர்களே நேரடியாக சிகிச்சை அளித்துள்ளனர். ஒவ்வொரு முறை சிசிக்சை அளிக்கும் போதும், அதை வாட்ஸ் அப்பில் படம்பிடித்து டாக்டர் சந்திரகலாவிற்கு அனுப்பி, அதன்பின் அவர் பரிந்துரைக்கும் விஷயங்களை செவிலியர்கள் செய்தனர். குழந்தையின் உடல்நிலை குறித்து தங்களுக்கு முழுமையான தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை. குழந்தையின் உடல்நிலை மோசம் அடைவதற்கு காரணமான மருத்துவமனை மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல, இந்த மருத்துவமனையின் செயல்பாடு குறித்து நாங்கள் ராமநாதபுரம் காவல்நிலையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, என தெரிவித்தார்.

இது குறித்து விளக்கம் அளித்து மருத்துவர் சந்திரகலா கூறுகையில், "ஆரம்பத்திலிருந்தே குழந்தைக்கு உரிய முறையில் சிகிச்சை அளித்தோம். பிரசவத்தின் போது நஞ்சுகொடி பிரிந்ததால் குழந்தையின் இதயதுடிப்பு குறைவாக இருந்தது. இதனையடுத்தே, உயர்சிகிச்சைக்காக கே.எம்.சி.எச் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தோம். வாட்ஸ் அப் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டதாக எழுந்து வரும் தகவல்கள் முற்றிலும் தவறு," எனக் கூறியுள்ளார்.
இதனிடையே, மருத்துவமனையின் கட்டுமானப் பணிகளே இன்னும் முடியாத நிலையில், உயர்தர கருவிகளும், சாதனங்களையும் பயன்படுத்தி உயர்தர சிகிச்சைகள் எவ்வாறு வழங்க முடியும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அதோடு, கட்டுமானப் பணிகள் முடிவடையாத நிலையில், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனைகளுக்கு அனுமதி வழங்க முடியும் என்ற கேள்வியையும் அவர்கள் முன் வைக்கின்றனர்.