ஜெர்மன் வங்கி உதவியோடு 12,000 பேருந்துகள் மற்றும் 2,000 மின்சாரப் பேருந்துகள் வாங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
ஜெர்மன் வங்கி உதவியோடு 12,000 பேருந்துகள் மற்றும் 2,000 மின்சாரப் பேருந்துகள் வாங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் போக்குவரத்துத் துறை செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தலைமையில் இன்று நடைபெற்றது. அதன்பிறகு, செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது :- சி40 என்ற பன்னாட்டு அமைப்பு மூலம் சென்னை, கோவை, மதுரையில் மின்சாரப் பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். நாட்டில் நிலவி வரும் சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்கும் முயற்சியில் தற்போது தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. இதன் முதற்கட்டமாக, தமிழகத்தில் சென்னையில் முதல்முறையாக மின்சாரப் பேருந்து திட்டத்திற்கு கடந்த 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் தமிழக அரசு ஒப்புதல் அளித்திருந்தது. அதன் தொடர்ச்சியாக சி40 நிறுவனத்திற்கும், போக்குவரத்துத் துறைக்கும் இடையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதனைத் தொடர்ந்து, கடந்த பிப்ரவரி மாதம் தமிழகத்தில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில், சென்னை, கோவை, மதுரையில் முதற்கட்டமாக 500 மின்சார பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அறிவித்திருந்தார். மேலும், ஜெர்மன் வங்கி உதவியோடு 12,000 பேருந்துகள் மற்றும் 2,000 மின்சாரப் பேருந்துகள் வாங்க அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக, சென்னையில் முக்கிய வழித்தடங்களில் சார்ஜிங் பாய்ண்ட் அமைக்க திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும், மின்சாரப் பேருந்துகளுக்கான வழித்தடங்கள், சார்ஜிங் பாய்ண்ட் குறித்த விரிவான திட்ட அறிக்கை அரசிடம் தரப்பட்டுள்ளது, இவ்வாறு அவர் கூறினார்.