கோவை : திருமலையாம்பாளையம் பகுதியில் கழிப்பிடம் கட்டித் தராமலேயே 700 விட்டிற்கு கட்டியதாக கணக்கு காட்டியுள்ள அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும், விரைவில் கழிப்பிட வசதி செய்து தரவும் வலியுறுத்தி பொதுமக்கள் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது.
கோவை : திருமலையாம்பாளையம் பகுதியில் கழிப்பிடம் கட்டித் தராமலேயே 700 விட்டிற்கு கட்டியதாக கணக்கு காட்டியுள்ள அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும், விரைவில் கழிப்பிட வசதி செய்து தரவும் வலியுறுத்தி பொதுமக்கள் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது.

கோவை மாவட்டம் திருமலையாம்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சுமார் 1,000-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.

அங்கு மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கழிப்பறைகள் கட்டித் தருவதாக கூறி, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பேரூராட்சி நிர்வாகம், ஒரு வீட்டுக்கு 8 ஆயிரம் ரூபாய் வீதம் 784 வீட்டிற்கு கழிப்பிடம் கட்ட அரசு அனுமதி பெற்றுள்ளது. இந்த நிலையில், கழிப்பிடம் கட்டித்தர வீட்டிற்கு ரூ. 4,000 வீதம் அதிகாரிகள் ரூ. 56 லட்சம் வரை வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து, மூன்றாண்டுகளாகியும் கழிப்பறை கட்டித்தராமல் அதிகாரிகள் ஏமாற்றியது தெரியாமல், மக்கள் கட்டித்தருவார்கள் என நம்பிக்கையுடன் இருந்துள்ளனர்.

தற்போது, 784 பேருக்கும் கடந்தாண்டு கழிப்பறை கட்டித் தந்துள்ளதாக பேரூராட்சி அதிகாரிகள் அரசுக்கு கணக்கு காட்டியது தெரியவந்துள்ளது. அதுமட்டுமில்லாமல், பொது இடத்தில் மலம் கழித்தால் தண்டிக்கப்படுவார்கள் என்ற விளம்பர பலகையையும் அதிகாரிகள் திருமலையாம்பாளையம் பஞ்சாயத்தில் வைத்துள்ளனர்.

அதிகாரிகள் கட்டித்தராமலே, கழிப்பிடம் கட்டியுள்ளதாக ஏமாற்றியதை அறிந்த அப்பகுதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு வந்த காவல்துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, அரசு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைக்கு உட்படுத்தி, போராட்டத்தை கைவிட வைத்தனர். பொதுமக்களை ஏமாற்றிய அதிகாரிகள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கோவையில் ஜோக்கர் பட பாணியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கழிப்பிடத்திற்கு பணத்தை வாங்கிக்கொண்டு, கட்டித் தராமல் ஏமாற்றும் சம்பவம் ஆனைகட்டியை தொடர்ந்து திருமலையாம் பாளையத்திலும் அரங்கேறியிருப்பது குறிப்பிடத்தக்கது. மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா..? என்பதை பொருந்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இந்த சம்பவம் தொடர்பாக திருமலையாம்பாளையம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் அனிதா என்பவர் கூறுகையில், "ஒவ்வொரு வீட்டிற்கும் கழிப்பிடம் கட்ட வேண்டும் என 4,000 ரூபாயை பேரூராட்சி அதிகாரிகள் வசூல் செய்துள்ளனர். ஆனால், கழிப்பிடம் கட்ட இரண்டு ரிங் மட்டும் போடப்பட்டு பல வருடங்கள் ஆகியும் கழிப்பிடம் கட்டவில்லை. இதனால், பொதுஇடத்தில் மட்டுமே மலம் கழிக்க வேண்டிய சூழல் உள்ளது. இதன் மூலம், பெண்கள் அவமானப்படுவதோடு, பல்வேறு இடையூறுகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது. அரசு தரப்பில் இருந்து 8,000 ரூபாய் பணத்தை வாங்கி விட்டு, இதுவரை கழிப்பிடம் கட்டித்தராமல், கடந்த ஆண்டே கட்டி கொடுக்கப்பட்டதாக அதிகாரிகள் பொய்யான தகவலை அரசுக்கு கொடுத்துள்ளனர். ஒரு சிலருக்கு மட்டுமே கடந்த வருடம் கழிப்பிடம் கட்டி தரப்பட்டிருப்பது தற்போதுதான் தெரிய வந்துள்ளது. பணத்தை வாங்கிக்கொண்டு கழிப்பிடம் கட்டித்தராமல் இழுத்தடிக்கும் அதிகாரிகள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும்," என வலியுறுத்தினார்.
இதேபோல, ரமேஷ்குமார் என்பவர் கூறியதாவது :- திருமலையாம்பாளையம் பேரூராட்சியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 784 கழிப்பிடம் கட்ட அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதில், 84 பயனாளிகளுக்கு மட்டுமே, கழிப்பிடங்கள் கட்ட 8,000 ரூபாய் பணம் அதிகாரிகளால் வழங்கப்பட்டு கட்டப்பட்டுள்ளது. மீதி இருப்பவர்களிடம் தலைக்கு 4 ஆயிரம் வீதம் வசூல் செய்யப்பட்டு, 56 லட்ச ரூபாயை, ஜோக்கர் பட பாணியில் அதிகாரிகள் ஏமாற்றியுள்ளனர். ஒரு குடும்பத்திற்கு, ஒரு கழிப்பிடம் கட்ட மட்டுமே அரசு அனுமதி அளித்த போதும், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பல பேரின் பெயரில் கழிப்பிடம் கட்ட முறைகேடாக அனுமதி வழங்கப்பட்டு 56 லட்ச ரூபாயை அதிகாரிகள் கையாடல் செய்துள்ளனர். முறைகேடாக அனுமதி வழங்கிய அதிகாரிகள் மீது லஞ்ச ஊழல் வழக்குப்பதிவு செய்ய வேண்டும். கழிப்பிடம் இல்லாத எங்களுக்கு உடனடியாக கழிப்பிடம் கட்டித்தர நடவடிக்கை எடுக்கக்கோரி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர், எனத் தெரிவித்தார்.