கோவை : ராம்நகர் அருகே தங்க நகைகளுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த நபரை திட்டமிட்டு விபத்தில் சிக்க வைத்து, பின்னர் அவருக்கு உதவுவதுபோல நடித்து 105 சவரன் நகைகளை பறித்துச் சென்ற சம்பவம் குறித்த வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.
கோவை : ராம்நகர் அருகே தங்க நகைகளுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த நபரை திட்டமிட்டு விபத்தில் சிக்க வைத்து, பின்னர் அவருக்கு உதவுவதுபோல நடித்து 105 சவரன் நகைகளை பறித்துச் சென்ற சம்பவம் குறித்த வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.
கோவை கடைவீதி அருகே நகைப்பட்டறை நடத்தி வருபவர் சுரேஷ். இவர் தனது நகைப்பட்டறையில் பணியாற்றும் ராமமூர்த்தியிடம் வியாபார நிமித்தமாக தங்க நகைகளை தாராபுரம் கொண்டு செல்ல அனுப்பியுள்ளார். இந்த நிலையில், ராமமூர்த்தி இன்று காலை சுமார் 10 மணியளவில் தாராபுரம் செல்ல தனது இருசக்கர வாகனத்தில் ராம்நகர் வழியாக பேருந்து நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், ராமமூர்த்தி சென்ற பைக் மீது மோதினர். இதையடுத்து, நிலைகுலைந்த ராமமூர்த்திக்கு உதவுவது போல இருவர் பல நாடகங்களை அரங்கேற்றினர்.

தொடர்ந்து, அரங்கேற்றிய நாடகத்தில் பனியன் அணிந்திருக்கும் கொள்ளையன் ராமமூர்த்தியை ஏமாற்றி 845 கிராம் (105.6 சவரன்) நகைகளை கொள்ளையடித்து தப்பி ஓடிவிட்டார். இதனால், அதிர்ச்சியடைந்த ராமமூர்த்தி கொள்ளையனின் பின்னாடியே துரத்திச் சென்றார். ஆனால், அதற்குள் அந்த நபர்கள் தப்பி ஓடிவிட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக ராமமூர்த்தி கொடுத்த புகாரின் பேரில், காட்டூர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், கொள்ளை கும்பல் விபத்தை ஏற்படுத்தி கையில் இருக்கும் பையை பறித்துச் சென்ற சம்பவம் அருகே உள்ள சி.சி.டி.வி. காட்சியில் பதிவாகியுள்ளது. இதன் அடிப்படையில் போலீசார் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.