கோவை : கவுண்டம்பாளையம் பகுதியில் சுமார் 40 ஆண்டுகளாக கோவை மாநகராட்சிக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த, 252 குடியிருப்புகளை காவல்துறையினரின் பாதுகாப்புடன் மாநகராட்சி நகரமைப்புத் துறை அதிகாரிகள் அப்புறப்படுத்தி வருகின்றனர்.
கோவை : கவுண்டம்பாளையம் பகுதியில் சுமார் 40 ஆண்டுகளாக கோவை மாநகராட்சிக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த, 252 குடியிருப்புகளை காவல்துறையினரின் பாதுகாப்புடன் மாநகராட்சி நகரமைப்புத் துறை அதிகாரிகள் அப்புறப்படுத்தி வருகின்றனர்.
கவுண்டம்பாளையம், ஜீவாநகர் பகுதியில் கடந்த 40 ஆண்டுகளாக வண்டித்தடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 252 வீடுகளை அப்புறப்படுத்துமாறு மாநகராட்சி நகரமைப்பு துறையினர் பல முறை நோட்டீஸ் வழங்கியிருந்தனர். இறுதியாக, கடந்த பிப்ரவரி மாதம் வீடுகளை காலி செய்யுமாறும் காலி செய்த வீடுகளுக்கு பதிலாக கோவை கீரணத்தம் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புகள் அமைத்து தந்துள்ளதாக அறிவுறுத்திய அதிகாரிகள், 15 நாட்களில் காலி செய்யாத பட்சத்தில் ஆக்கிரமிப்புகள் அப்புறப்படுத்தப்படும் எனவும் எச்சரித்திருந்தனர்.

எனினும், அங்கிருந்த குடியிருப்புவாசிகளில் பெரும்பாலானோர் தங்கள் குடியிருப்புகளை காலி செய்யாமல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். ஆனால், வழக்கு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், இன்று காலை சுமார் நான்கு ஜே.சி.பி. மற்றும் இரண்டு டிராக்டர் வாகனங்களைக் கொண்டு மாநகராட்சி அதிகாரிகள் வீடுகளை இடிக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு வசிக்கும் சிலர் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மேலும், தீயணைப்பு வாகனம் மற்றும் ஆம்புலன்ஸ் வாகனமும் வரவழைக்கப்பட்டு, அங்கு நிறுத்தப்பட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது.
தொடர்ந்து பலத்த பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இன்று 132 வீடுகள் இடிக்கப்பட்டு வரும் சூழலில் மீதமுள்ள 120 வீடுகளின் உரிமையாளர்கள் நோட்டீசு வாங்க மறுத்துள்ளதாகவும், அவர்களது வீடுகள் ஓரிரு நாளில் அப்புறப்படுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.