கோவை : வாஷிங்டனில் நடைபெறும் தலித் மற்றும் பழங்குடியின மக்கள் மீது நடத்தப்படும் மனித உரிமை மீறல் குறித்த அவலங்களை விளக்கும் கருத்தரங்கில் தமிழகத்தில் இருந்து 6 பேர் பங்கேற்க உள்ளனர்.
கோவை : வாஷிங்டனில் நடைபெறும் தலித் மற்றும் பழங்குடியின மக்கள் மீது நடத்தப்படும் மனித உரிமை மீறல் குறித்த அவலங்களை விளக்கும் கருத்தரங்கில் தமிழகத்தில் இருந்து 6 பேர் பங்கேற்க உள்ளனர்.

இந்தியாவில் தலித் பழங்குடியின மக்கள் மீது நிகழ்த்தப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்த நிலவரங்களை அறிய அமெரிக்க அரசு சார்பில் 22 நாள் சிறப்பு கருத்தரங்கு நடைபெறுகிறது. இந்தக் கருத்தரங்கில் பங்கேற்க பழங்குடியின மற்றும் தலித் செயல்பாட்டாளர்கள், ஆய்வாளர்கள் என ஒதுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகளாக சிலரை இனம் கண்டு தேர்ந்தெடுத்து, அவர்களை தங்கள் நாட்டுக்கு அழைத்து அடித்தட்டு மக்களின் நிறைகளை கேட்டறிந்து கருத்து கேட்பு மற்றும் கருத்தரங்குகள் நடத்தப்படுகின்றன.

இதன் அடிப்படையில், இந்தியாவில் இருந்து 7 பேர் தேர்வாகியுள்ளனர். இதில், 6 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். தமிழகத்தில் பழங்குடியின மக்கள் அதிகம் வாழும் நீலகிரி மற்றும் கோவை பகுதியில் பிரதிநிதியாக பழங்குடியினர் சார்பில் வீரப்பன் தேர்வாகி அமெரிக்கா சென்றுள்ளார்.

முதுகலை பட்டதாரியான வீரப்பன், கடந்த 29 ஆண்டுகளாக பழங்குடி மற்றும் தலித் மக்களுக்காக தொடர்ந்து போராடி வருகிறார். மேலும், நீலகிரி காடுகளில் வாழும் பழங்குடி இன மக்களின் உரிமைகளுக்காக முன்னெடுப்பை மேற்கொண்டவராவார். வாஷிங்டன் மி.சி.சி.பி., நியூ ஓர்லென்ஸ், பென்சில்வேனியா போன்ற பகுதிகளில் விளக்கப் பயிற்சி நடைபெற உள்ளது. மேலும், செவ்விந்திய பழங்குடியின மக்களுடன் கலந்துரையாடலும் நடக்கிறது. இதன் மூலம், அமெரிக்க பழங்குடிகளின் நிலையை அறிந்துகொள்ள முடியும். அதே சமயம், இந்திய பழங்குடிகள் பெற வேண்டிய உரிமைகள் குறித்தும் அறிந்துகொள்ள இது வாய்ப்பாக அமைந்துள்ளதாக இதில் பங்கேற்றவர்கள் தெரிவித்துள்ளனர்.