கரூர் : இந்து தீவிரவாதி என்ற சர்ச்சை பேச்சு தொடர்பான வழக்கில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு முன் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
கரூர் : இந்து தீவிரவாதி என்ற சர்ச்சை பேச்சு தொடர்பான வழக்கில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு முன் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, அரவக்குறிச்சியில் பேசிய கமல்ஹாசன், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து” என்று கூறினார். தேர்தல் சமயத்தில் கமலின் இந்த பேச்சு மாபெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதற்கிடையே, இந்து முன்னணி நிர்வாகி அளித்த புகாரின் பேரில், அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, கமல் சார்பில் முன் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை மே 20ஆம் தேதி விசாரித்த நீதிமன்றம், 15 நாட்களுக்குள் அரவக்குறிச்சி 4ஆவது நீதித்துறை நடுவர் மன்றத்தில் ஆஜராகி இரண்டு நபர்களின் உத்தரவாதத்துடன் 10 ஆயிரம் ரூபாய் பிணைத்தொகை செலுத்தி முன் ஜாமீன் பெற்றுக்கொள்ளலாம் என்று உத்தரவிட்டது. அதன்படி, நேற்று (ஜூன் 1) கமல் நீதிமன்றத்தில் ஆஜரானார். அவருக்கு முன் ஜாமீன் வழங்கி நீதிபதி விஜய் கார்த்தி உத்தரவிட்டார். கமலின் வருகையை ஒட்டி நீதிமன்ற வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.