கோவை : கோவையில் நகை மோசடி செய்ததாகக் கூறி தனியார் நகை அடகு கடையை வாடிக்கையாளர்கள் முற்றுகையிட்டதால், பெண் ஊழியர்கள் கடையின் உள்ளே தாழிட்டு 3 மணி நேரமாக தவித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கோவை : கோவையில் நகை மோசடி செய்ததாகக் கூறி தனியார் நகை அடகு கடையை வாடிக்கையாளர்கள் முற்றுகையிட்டதால், பெண் ஊழியர்கள் கடையின் உள்ளே தாழிட்டு 3 மணி நேரமாக தவித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கோவை ரத்தினபுரி சாஸ்திரி ரோட்டில் செயல்பட்டு வருகிறது என்.எஸ்.கே பான் புரோக்கர்ஸ் என்ற நகை அடமானம் வாங்கும் நிறுவனம். இந்த நிறுவனத்தை ரத்தினபுரி பொங்கியம்மாள் வீதியைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவர் கடந்த 10 வருடங்களாக நடத்தி வருகிறார். இந்தப் பகுதியில் வசிக்கும் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இந்த கடையில் தங்களுக்கு சொந்தமான தங்க நகைகளை அவசர தேவைக்காக அடமானம் வைத்து உள்ளனர். கடந்த 2 மாதங்களாக அடமானம் வைத்த வாடிக்கையாளர்கள் தங்கள் நகைக்கு உரிய கடன் பணத்தை முழுவதும் செலுத்தியும் நகைகளை திருப்பி தராமல் காலம் கடத்தி வருவதாகத் தெரிகிறது.

இதனால், ஆத்திரமடைந்த வாடிக்கையாளர்கள் நேற்று மாலை 6 மணியளவில் 25-க்கும் மேற்பட்டோர் அந்த நிறுவனத்தை முற்றுகையிட்டனர். மேலும், நிறுவனத்தின் சொந்தக்காரர் முத்துக்குமார், பணிப்பெண்களிடம் கடையைப் பார்த்து கொள்ள சொல்லிவிட்டு அடமானம் வைத்தவர்களிடம் நகைகளைக் கொண்டு வருகிறேன் என்று சொல்லி வெளியேறி விட்டார். அவர் வெளியே சென்று வெகுநேரமாக திரும்பாததால், ஆத்திரமடைந்த வாடிக்கையாளர்கள் கூச்சலிடத் தொடங்கினர்.

இந்த நிலையில், நிறுவனத்தின் பணிப்பெண்கள் கடையின் ஷட்டரை உள்பக்கமாக பூட்டிக் கொண்டனர். ரத்தினபுரி போலீசார் தகவல் கிடைக்கப் பெற்று சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களை சமாதானப்படுத்தினர். ஆனால், பொதுமக்கள் மிகவும் ஆத்திரமடைந்து காவல்துறையினர் பேச்சுவார்த்தைக்கு உடன்படாமல் சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த ரத்தினபுரி காவல்நிலைய ஆய்வாளர் சக்திவேல் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களை சமாதானப்படுத்தி அப்புறப்படுத்தினர். பின்னர், கடையின் பூட்டை திறந்து கடை உள்ளே இருந்த மூன்று பெண்களும் பத்திரமாக மீட்கப்பட்டு, அவர்களது வீட்டிற்கு காவல்துறையினர் அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து, அப்பகுதியில் கூடிய பொதுமக்களை காலையில் காவல் நிலையம் வந்து புகார் அளிக்கக் கூறிய காவல் துறையினர், புகார் அளித்தால் தான் சரியான தீர்வு காண முடியும் என கூறியதை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.