கோவை : கோவைபுதூர் அருகே நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் கல்லூரியில் பணிபுரிந்து வந்த மனைவியை, கல்லூரி வளாகத்திற்கு வெளியே வைத்து கணவர் கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை : கோவைபுதூர் அருகே நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் கல்லூரியில் பணிபுரிந்து வந்த மனைவியை, கல்லூரி வளாகத்திற்கு வெளியே வைத்து கணவர் கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவைபுதூர் அருகே உள்ள குளத்துப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கனகராஜ்(35). இவரது மனைவி நந்தினி (28). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பிளம்பர் வேலை செய்து வந்தார். இந்த தம்பதியருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். நந்தினி செல்போனில் அடிக்கடி யாருடனோ பேசிக் கொண்டு இருப்பதாக கணவருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. மேலும், செல்போன் உரையாடல் மற்றும் டிக் டோக் செயலியை பயன்படுத்துவது தொடர்பாகவும் இருவருக்குமிடையே வாக்குவாதம் எழுந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், இன்று மதியம் கனகராஜ் செல்போன் மூலம் நந்தினிக்கு அழைத்தபோது நீண்ட நேரம் நேரமாகியும் செல்போன் இணைப்பு கிடைக்கவில்லை. இதில், ஆத்திரம் அடைந்த கணவர், நந்தினி வேலை செய்யும் கல்லூரி வளாகத்துக்கு சென்று அவரிடம் தகராறு செய்துள்ளார். பின்னர் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து வயிறு உள்ளிட்ட 3 இடங்களில் குத்தியுள்ளார். இதில், நந்தினி ரத்தவெள்ளத்தில் அதே இடத்தில் மயங்கி விழுந்தார். இதைத்தொடர்ந்து, கனகராஜ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இதையடுத்து, அருகில் இருந்தவர்கள் கோவை அரசு மருத்துவமனைக்கு நந்தினியை அழைத்துச் சென்றனர். ஆனால், அவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக மதுக்கரை போலீசார் கனகராஜை கைது செய்துள்ளனர்.