கோவை : போலியான விளம்பரங்களைக் கண்டு ஏமாற வேண்டாம் என பொதுமக்களுக்கு டிராவல் ஏஜெண்ட் அசோசியேசன் கோரிக்கை விடுத்துள்ளது.
கோவை : போலியான விளம்பரங்களைக் கண்டு ஏமாற வேண்டாம் என பொதுமக்களுக்கு டிராவல் ஏஜெண்ட் அசோசியேசன் கோரிக்கை விடுத்துள்ளது.
பயண முகவர்கள் கூட்டமைப்பு 'டிராவல்ஸ் ஏஜெண்ட் அசோசியேசன் ஆப் கோயமுத்தூர்' நிர்வாகிகளின் அவிநாசி சாலையில் உள்ள தனியார் விடுதியில் இன்று பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது அந்த அமைப்பின் தலைவர் கிருஷ்ணராஜா பேசியதாவது :- தங்களது அமைப்பு கடந்த நான்கு ஆண்டுகளாக கோவையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இதில், சேலம், திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்டங்களில் அனுபவமும், அரசு அங்கீகாரம் பெற்ற டிராவல்ஸ் ஏஜெண்ட் மற்றும் டூர் ஆபரேட்டர்கள் கொண்டு செயல்பட்டு வருகிறது. சமீப காலமாக செய்தித்தாள்கள் மற்றும் மீடியாக்களில் டிராவல்ஸ் ஏஜென்சி என்ற பெயரில் பணத்தை பெற்று கொண்டு ஏமாற்று பேர்வழிகள் பணம் பறித்து வருகின்றனர். இதுபோன்ற நபர்கள் எல்லா மாவட்டங்களிலும் செயல்பட்டு வருகின்றனர்.

கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து குறைந்த கட்டணத்தில் வெளிநாடு மற்றும் உள்நாட்டு சுற்றுலா அழைத்து செல்வதாகப் பொதுமக்களை ஏமாற்றும் இந்த போலி நபர்களிடம் ஏமாற வேண்டாம். மேலும், இவ்வாறு போலியாக செயல்படும் நிறுவனங்கள் குறிப்பிட்ட தொகை பெற்ற பின், தொழில் நஷ்டம் அடைந்து விட்டதாகக் கூறி அலுவலகங்களை மாற்றுவது தொடர் கதையாகிவிட்டது. உரிய உரிமம், நல்ல அனுபவம் மற்றும் அங்கீகாரம் பெற்று செயல்படும் பயண முகவர்கள் மூலம் விசா, விமான பயணம் உள்ளிட்ட பல்வேறு தேவைகளை அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் மூலம் பொதுமக்கள் பலன் பெற வேண்டும்.
உண்மையான முகவர்களை பொதுமக்கள் விழிப்புடன் தேர்ந்தெடுக்க வேண்டும். அவர்களை அணுகும் போது, அரசின் விதிமுறைகளை அவர்கள் பின்பற்றுகின்றனரா..? முன்பதிவு செய்யும் போது ரசீது முறையாக வழங்குகின்றனரா..?. அதில், ஜி.எஸ்.டி. வரி உள்ளனவா..? என்பதனை பார்த்து முன்பதிவு செய்ய வேண்டும். பணத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் போலி முகவர்களிடம் பொதுமக்கள் ஏமாற வேண்டாம், என்றார்.

இந்த சந்திப்பின் போது அவ்வமைப்பின் செயலாளர் பாரதி, பொருளாளர் பால குமரேசன் மற்றும் உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.