கோவை : வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக மோசடியில் ஈடுபடுபவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு பா.ம.க.வினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை : வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக மோசடியில் ஈடுபடுபவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு பா.ம.க.வினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை மாவட்டத்தில் கடந்த சில வருடங்களாக வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாகக் கூறி பண மோசடிகள் செய்யும் கும்பல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த கும்பல்கள் கோவை மாவட்டத்தை தலைமையிடமாக வைத்து தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டத்தில் உள்ள இளைஞர்களை ஏமாற்றி பணம் சம்பாதித்து வருகின்றனர். இது போன்ற மோசடி நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி பா.ம.க. உள்ளிட்ட அரசியல் கட்சிகளும், பாதிக்கப்பட்டவர்களும் கோவை மாநகர காவல்நிலையங்களில் அடுக்கடுக்கான புகார்களை அளித்து வருகின்றனர்.
இந்த நிலையில், வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக மோசடியில் தொடர்ந்து ஈடுபட்டு வருபவர்களைக் குண்டர் சட்டத்தில் கைது செய்யக் கோரி கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு பா.ம.க. சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் அக்கட்சியைச் சேர்ந்த ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

போராட்டத்தின் போது, பா.ம.க. மாநில இளைஞரணி செயலாளர் அசோக் ஸ்ரீநிதி பேசுகையில், "வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஏமாற்றும் போலி நிறுவனங்கள் மீது 300-க்கும் மேற்பட்ட புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. இதில், ஒருசிலர் கைது செய்யப்பட்டுள்ளது. ஆனால், அவர்கள் எளிதில் ஜாமீனில் வெளியே வந்து விடுகின்றனர். மேலும், இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு பிறரை ஏமாற்றிப் பெறும் பணத்தை வேறு வியாபாரங்களில் முதலீடாகப் போடுகின்றனர். எனவே, இந்தக் குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது. அல்லது குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். மேலும், வெளிநாடுகளில் வேலைவாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்யப்பட்ட வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்ற வேண்டும்," எனக் கூறினார்.

மேலும், காவல்துறை சார்பில் தனிக்குழு அமைத்து, இது போன்ற மோசடியில் ஈடுபடுபவர்களைக் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என பா.ம.க. சார்பில் வலியுறுத்தப்பட்டது.