கோவை : தமிழக அரசின் 10பி ஆணையை மதிக்காமல், பணிக்கு சென்றவர்களை திருப்பி அனுப்பிய பிரிக்கால் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கோவை : "தமிழக அரசின் 10பி ஆணையை மதிக்காமல், பணிக்கு சென்றவர்களை திருப்பி அனுப்பிய பிரிக்கால் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்", என்று வலியுறுத்தி கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பெரியநாயக்கன் பாளையம் பகுதியில் உள்ள பிரிக்கால் தொழிற்சாலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணி புரிந்து வருகின்றனர். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21-ம் தேதி பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளர்கள் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 302 பேரை இடமாற்றம் செய்து நிர்வாகம் உத்தரவிட்டது. ஒரு சிலரை தவிர 293 பேர் பணி மாற்ற உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்தினர். இதனைத் தொடர்ந்து, பல்வேறுகட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற நிலையில், கடந்த ஜனவரி மாதம் தொழில் தகராறு ஏற்பட்டது. பின்னர், தொழிலாளர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அப்போது, ஊழியர்களை பலி வாங்கும் நடவடிக்கையில் ஈடுபட மாட்டோம் என பிரிக்கால் நிறுவனம் தெரிவித்ததாகவும், எனவே, 293 பேரின் பணியிட மாற்றல் உத்தரவு குறித்து நீதிமன்ற தீர்ப்பு வரும் வரையில் பணியிட மாற்றத்திற்கு 10பி அரசாணையை தமிழக அரசு பிறப்பித்திருந்தது.

இந்த நிலையில், அரசாணையை அவமதிக்கும் வகையில், பணிக்கு சென்றவர்களை உள்ளே அனுமதிக்காமல் பிரிக்கால் நிர்வாகம் தடுத்ததாக கூறப்படுகிறது. இதனை கண்டித்து பிரிக்கால் நிறுவன ஊழியர்கள் 10பி அரசாணையை அமல்படுத்தாத பிரிக்கால் நிறுவனத்திற்கு எதிராக இன்று கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன கோஷங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டதில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் ஏ.ஐ.சி.சி.டி.யு மாநில செயலாளர் ஜெயபிரகாஷ் நாராயணன் பேசியதாவது :- "தொழிலாளர் விரோதப் போக்கை தொடர்ந்து கடைபிடித்து அரசாணையை மதிக்காமல் செயல்படுவதால், தமிழக அரசு உடனடியாக ஆலை நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், மக்கள் மற்றும் அரசியல் கட்சியினருடன் ஆலோசனை நடத்தி ஆலை வாயில் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்", என தெரிவித்தார்.