கோவை :கோவை நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணும் மையத்தில் தேர்தல் அதிகாரி கு.ராசாமணி நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
கோவை :கோவை நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணும் மையத்தில் தேர்தல் அதிகாரி கு.ராசாமணி நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

நாடு முழுவதும் மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ள நிலையில், கோவை மாவட்டத்தின் வாக்கு எண்ணும் மையமான ஜி.சி.டி. கல்லூரியில் தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கு. ராசாமணி நேரில் பார்வையிட்டார். அப்போது, பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் முன்னேற்பாட்டு பணிகளை ஆய்வு செய்தார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :-இயந்திரங்கள் 3 அடுக்கு காவல் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் பணிக்கு 100 விழுக்காடு ஆயத்தமாக உள்ளோம். 7 சட்டமன்ற தொகுதிகளுக்கும் 14 மேசைகள் வீதம் அமைக்கப்பட்டுள்ளது. கவுண்டம்பாளையம் தொகுதிக்கு மட்டும் 20 மேசைகள் அமைக்கப்பட்டுள்ளது. பல்லடம் தொகுதிக்கு 30 சுற்றுகளாக வாக்குகள் அமைக்கப்படும். 1,500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தேர்தல் ஆணையம் வழங்கிய அடையாள அட்டை இல்லாமல் யாரும் வாக்கு எண்ணும் மையத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். முகவர்கள் பேனா மற்றும் கையேடு மட்டுமே எடுத்து செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.
வாக்கு எண்ணும் மையத்திற்கு மட்டும் சிறப்பு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. முடிவுகள் அறிவிக்கப்பட தாமதமாக வாய்ப்புள்ளது. நிதானமாகவே வாக்குகள் எண்ணப்படும். ஆனால், முடிந்தவரை விரைவாக முடிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும். கடந்த கால அனுபவங்களை கணக்கில் கொண்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 3 அடுக்கு சோதனைக்கு பிறகே முகவர்கள் வாக்கு எண்ணும் மையத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். 5,527 தபால் ஓட்டுக்கள் பெறப்பட்டுள்ளது. 12 ஆயிரம் தபால் ஓட்டுக்கள் அனுப்பப்பட்ட நிலையில், நாளை காலை வரை தபால் வாக்குகள் பெறப்படும்.
நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட 5 சட்டமன்ற தொகுதிகளின் வாக்குகள் 8 மணிக்கு எண்ண துவங்கப்படும். தேரதல் ஆணையம் வழங்கியுள்ள சலுகையின்படி, ஆட்சியருக்கு உள்ள அதிகாரத்தால் ஒரே ஒரு சட்டமன்ற தொகுதிக்கு மட்டும் வாக்கு எண்ணிக்கை 8.30க்கு துவங்கப்படும், என்றார்.