நீலகிரி : குன்னூர் அருகே உள்ள ஆதிவாசி கிராமத்தில் நேற்றிரவு மின்னல் தாக்கியதில் கர்ப்பிணி பெண் உள்ளிட்ட 10 பேர் காயம் அடைந்தனர். அப்பகுதியில் போதிய சாலை வசதி இல்லாததால், படுகாயமடைந்தவர்கள் இன்று மதியம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
நீலகிரி : குன்னூர் அருகே உள்ள ஆதிவாசி கிராமத்தில் நேற்றிரவு மின்னல் தாக்கியதில் கர்ப்பிணி பெண் உள்ளிட்ட 10 பேர் காயம் அடைந்தனர். அப்பகுதியில் போதிய சாலை வசதி இல்லாததால், படுகாயமடைந்தவர்கள் இன்று மதியம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

குன்னூர் அருகே உள்ள சின்னாலக் கம்பை ஆதிவாசி கிராமத்தில் 60-க்கும் மேற்பட்ட இருளர் இன மக்கள் வாழ்ந்து வருகின்றனர். நேற்று இப்பகுதியில் பெய்த மழையின் போது, ஏற்பட்ட இடி மற்றும் மின்னல் தாக்கியதில் கர்ப்பிணி பெண்ணான தீபா உள்பட பிரியா, கமலா, மல்லிகா, ராணி, வள்ளி, செல்வி, நாகராஜ், தினேஷ், ஆறுமுகம் உள்ளிட்ட 10 பேர் காயம் அடைந்தனர்.
இது குறித்து 108 ஆம்புலன்சிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சின்னாலக் கம்பை கிராமத்திற்கு விரைந்த ஆம்புலன்ஸ், போதிய சாலை வசதி இல்லாததால் சேற்றுக்குள் சிக்கிக் கொண்டது. இதனைத் தொடர்ந்து, மருத்துவனை ஊழியர்கள் ஸ்டெரச்சர் உதவியுடன் இன்று மதியம் பாதிக்கப்பட்ட மக்களை அழைத்துக் கொண்டு குன்னூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
உரிய சாலை வசதி இல்லாததால், இதுபோன்ற அவசர காலங்களில் ஒருநாள் தாமதமாக மருத்துவமனைக்கு பாதிக்கப்பட்டவர்களைக் கொண்டு சென்றிருப்பது இருளர் இன மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.