கோவை : பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது பதியப்பட்ட வழக்குப்பதிவை ரத்து செய்யக் கோரி கோவை சட்டக்கல்லூரி மாணவர்கள் 2-வது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தை நடத்தி வரும் நிலையில், தேர்தலுக்குப் பிறகு சட்டக்கல்லூரி மாணவர்கள் மீதான வழக்குப்பதிவை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை சட்டக்கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கோவை : பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது பதியப்பட்ட வழக்குப்பதிவை ரத்து செய்யக் கோரி கோவை சட்டக்கல்லூரி மாணவர்கள் 2-வது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தை நடத்தி வரும் நிலையில், தேர்தலுக்குப் பிறகு சட்டக்கல்லூரி மாணவர்கள் மீதான வழக்குப்பதிவை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை சட்டக்கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பொள்ளாச்சி விவகாரத்தைக் கண்டித்து கடந்த 14-ம் தேதி வடவள்ளி பகுதியில் சட்டக்கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் மீது போலுசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனிடையே, வழக்குப்பதிவு ஆனவர்கள் யாரும் தேர்வு எழுத முடியாது என சட்டக் கல்லூரி முதல்வர் அறிக்கை வெளியிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதையடுத்து, சட்டக்கல்லூரி மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ததைத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி, 2-வது நாளாக கோவை சட்டக்கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.
மேலும், பெண்களின் பெயர்களை வெளியிட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் மீது துறை ரீதியாகவும், சட்டப்படியும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், 10 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்தில் பணிபுரியும் கல்லூரி முதல்வர் ஒரு சார்பாக செயல்படுவதால், அவரை இடமாற்றம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு சட்டக்கல்லூரி மாணவர்கள் மீதான வழக்குப்பதிவை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை சட்டக்கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், இப்போராட்டமானது மனதை உலுக்கும் சம்பவத்திற்கானது என்பதால், மாணவர்கள் மீது இடைநீக்கம் போன்ற நடவடிக்கைகள் ஏதும் மேற்கொள்ளப்படமாட்டாது. மாணவர்கள் எதிர்வரும் காலங்களில் தடையின்றி சட்டக் கல்வியை தொடர்வதற்கு தேவையான நடவடிக்கைகளில் ஈடுபடுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
ஆனால், கல்லூரி முதல்வரின் எழுத்துப்பூர்வ வாக்குறுதி மீது நம்பிக்கை இல்லை என்றும், சட்ட அமைச்சர் அல்லது சட்ட கல்லூரி இயக்குனர் தங்களை சந்தித்து பேச வேண்டும் என்று கூறி போராட்டதை தொடர்ந்து வருகின்றனர்.