கோவை : பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது பதியப்பட்ட வழக்குப்பதிவை ரத்து செய்யக் கோரி கோவை சட்டக்கல்லூரி மாணவர்கள் மேற்கொண்டு வரும் உள்ளிருப்பு போராட்டம் 2-வது நாளாக தொடர்ந்து வருகிறது.
கோவை : பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது பதியப்பட்ட வழக்குப்பதிவை ரத்து செய்யக் கோரி கோவை சட்டக்கல்லூரி மாணவர்கள் மேற்கொண்டு வரும் உள்ளிருப்பு போராட்டம் 2-வது நாளாக தொடர்ந்து வருகிறது.

பொள்ளாச்சி விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு முழுவதும் மாணவர்கள், வழக்கறிஞர்கள் அனைத்து கட்சி அமைப்பினர் என பலர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒருபகுதியாக, கோவை மாவட்டத்தில் போராட்டங்களில் ஈடுபட்ட மாணவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். அதேபோல, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மற்றும் வழக்குப்பதிவு ஆனவர்கள் யாரும் தேர்வு எழுத முடியாது என சட்டக் கல்லூரி முதல்வர் அறிக்கை வெளியிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ததைத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி, தற்போது சட்டக்கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், 167 பேர் மீதான வழக்கை உடனடியாக ரத்து செய்யக் கோரியும், ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்படும் கல்லூரி முதல்வரைக் கண்டித்தும் மாணவர்கள் கோஷங்களை எழுப்பி வந்தனர்.
மாணவர்களின் இந்தப் போராட்டத்தால், வழக்குப்பதிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு தேர்வு எழுத எந்தவிதமான தடையும் இல்லை என கோவை அரசு சட்டக்கல்லூரி நேற்று விளக்கமளித்தது. இதனால், போராட்டத்தை மாணவர்கள் முடித்துக் கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், மூன்று அம்ச கோரிக்கைகள் நிறைவேறும் வரை உள்ளிருப்பு போராட்டம் தொடரும் என மாணவர்கள் நள்ளிரவிலும் தங்களது போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். அதாவது, பெண்களின் பெயர்களை வெளியிட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் மீது துறை ரீதியாகவும், சட்டப்படியும் நடவடிக்கை எடுக்க வேண்டும், பொள்ளாச்சி சம்பவம் தொடர்பாக நடவடிக்கைகள் எடுக்கக் கோரி போராடிய மாணவர்கள் மீது பதிவு செய்த வழக்கை உடனடியாக ரத்து செய்ய வேண்டும், அதேபோல, 10 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்தில் பணிபுரியும் கல்லூரி முதல்வர் ஒரு சார்பாக செயல்படுவதால், அவரை இடமாற்றம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நள்ளிரவிலும் மாணவர்களின் போராட்டம் தொடர்ந்தது.
இதையடுத்து, மாணவர்கள் தங்களது போராட்டத்தை 2-வது நாளாக நீடித்து வருகின்றனர். மாணவர்களின் இந்த தொடர் போராட்டத்தால், இன்று கல்லூரிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், மாணவர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கல்லூரி விடுமுறை அழைத்தும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதால், இன்று மாலைக்குள் அவர்களை கைது செய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.