கோவை : 17 வது மக்களவை தேர்தல் தேதி அறிவித்ததில் இருந்து, தேர்தல் களம் பரபரப்படைந்துள்ளது. தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் உள்ள 40 தொகுதிகளில் தேர்தலை எதிர்கொள்ள தமிழக அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. கூட்டணி பேச்சுவார்த்தை நிறைவடைந்து, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் துவங்கியுள்ளன.
கோவை : 17 வது மக்களவை தேர்தல் தேதி அறிவித்ததில் இருந்து, தேர்தல் களம் பரபரப்படைந்துள்ளது. தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் உள்ள 40 தொகுதிகளில் தேர்தலை எதிர்கொள்ள தமிழக அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. கூட்டணி பேச்சுவார்த்தை நிறைவடைந்து, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் துவங்கியுள்ளன.
திமுக கூட்டணி
பாஜக எதிர்ப்பு என்ற புள்ளியில் அணி திரண்ட காங்கிரஸ், இடதுசாரிகள், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் திமுகவோடு, கடந்த ஒராண்டிற்கும் மேலாக தோழமை கட்சிகளாக இயங்கி வந்தன. அந்த கட்சிகளை இழுபறி இல்லாமல் கூட்டணி கட்சியாக மாற்றி, தொகுதி பங்கீடு எண்ணிக்கையை திமுக அறிவித்தது.

திமுக கூட்டணி
காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி சேர்த்து 10 தொகுதிகளை ஒதுக்கியது திமுக. இது அதிகபட்ச எண்ணிகையாக இருந்தாலும், தேர்தலுக்கு பின் காங்கிரஸ் ஆட்சியமைத்தால் மத்திய அமைச்சரவையில் திமுக எண்ணிக்கையை அதிகரிக்க, அதிக தொகுதிகளை ஒதுக்கியது. இடதுசாரிகளான இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் தலா 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதேபோல விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. மதிமுகவிற்கு ஒரு மக்களவை தொகுதியும், ஒரு மாநிலங்களவை உறுப்பினர் சீட்டும் வழங்கப்பட்டது. கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டது.

இறுதி நேரத்தில் இந்திய ஜனநாயக கட்சி கூட்டணியில் சேர, கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்பிருந்தே கூட்டணியில் இருந்த மனிதநேய மக்கள் கட்சி கழட்டி விடப்பட்டது. இதற்கு 20 தொகுதிகளில் திமுக போட்டியிட வேண்டுமென விரும்பியதே காரணம். வருந்தம் இருந்தாலும், நாட்டின் நலன்கருதி திமுக கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக கூறியது, மனிதநேய மக்கள் கட்சி.

தொகுதி பங்கீட்டை சுமூகமாக முடித்த திமுக, கூட்டணி கட்சிகளை ஒவ்வொன்றாக அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியது. அதில் எந்த கட்சிக்கு எந்த தொகுதி என்பதை பேசி இறுதி செய்துவிட்டது. அதிகாரபூர்வ அறிவிப்பையும், வேட்பாளர் பட்டியலை வெளியிட வேண்டியதுமே பாக்கி.
அதிமுக கூட்டணி
தேர்தல் அறிவிப்பிற்கு முந்தைய அனைத்து கருத்து கணிப்புகளும் வலுவான கூட்டணியை உறுதி செய்திருந்த திமுகவிற்கே சாதகமாக வந்தது. அதிமுக ஒற்றை இலக்க தொகுதிகளில் மட்டுமே வெல்லும் என்றனர். இதனால் அதிமுக கூட்டணி அமைப்பதில் அதிக கவனம் செலுத்தியது. திமுகவிற்கு எதிரான கட்சிகளை ஒன்று திரண்ட அதிமுக முயன்றது. அதற்கு பாஜக உதவியது. அதிமுகவை மிக கடுமையாக விமர்சித்த கட்சிகளை “மறப்போம், மன்னிப்போம்” என்ற விதிப்படி கூட்டணியில் சேர்க்க முடிவு செய்தது. வாக்கு வங்கி அடிப்படையில் கூட்டணி அமைத்தது. எந்த வாக்குகளை இழக்க கூடாது என்பதற்காக அதிமுக, இறங்கி வந்தது. அதிமுக, பாமக, பாஜக கூட்டணி எளிதாக முடிந்தாலும், தேமுதிகவை சேர்ப்பதில் இழுபறி நீடித்தது.

‘பேர அரசியல்’ நடத்திய தேமுதிக, அதிமுக, திமுக இரண்டு கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தியது. பாமகவிற்கு இணையான தொகுதிகளை பெற விரும்பியது. ஆரம்பத்தில் திமுகவிற்கு பிடி கொடுக்காத தேமுதிக, கூட்டணி கதவுகள் மூடப்பட்ட பின்னர் கதவை தட்டியது. பலனில்லை என்பதையும், வேறு வாய்ப்பும் இல்லை என்பதை உணர்ந்து அதிமுகவோடு கைகுலுக்கியது. இதேபோல தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியோடும் நீண்ட இழுபறிக்கு பின்னர் தொகுதி பங்கீடு கையெழுத்தானது.

ஆக, 20 தொகுதிகளில் அதிமுக போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. பாமகவிற்கு 7, பாஜகவிற்கு 5, தேமுதிகவிற்கு 4, என்.ஆர்.காங்கிரஸ், புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி, தமாகாவிற்கு தலா ஒன்று என தொகுதி பங்கீடு எட்டப்பட்டது. இன்னும் எந்த கட்சிக்கு எந்த தொகுதி என்ற அதிகாரபூர்வ பேச்சுவார்த்தையை அதிமுக துவக்கவே இல்லை.
அமமுக கூட்டணி
திமுக, அதிமுக கட்சிகள் கூட்டணிக்காக பரபரத்து கொண்டிருக்க, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் எந்தவித ஆரவாரமும் இன்றி காணப்பட்டது. 37 தொகுதிகளில் அமமுக போட்டியிடும் என அறிவித்தார், அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர், டிடிவி தினகரன். தனித்தே போட்டியிட விரும்பினாலும், சில கட்சிகளை கூட்டணியில் சேர்க்க உள்ளதாகவும் அவர் கூறினார். அதற்கேற்ப எஸ்.டி.பி.ஐ, தமிழக வாழ்வுரிமை கட்சி ஆகியவை கூட்டணியில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளன. இரண்டு கட்சிகளுக்கும் தலா ஒரு தொகுதி ஒதுக்கப்படலாம் என்றாலும், கூட்டணி அதிகாரபூர்வமாக உறுதியாகவில்லை.

ஆளுமையை நிரூபிக்க போவது யார்?
தமிழகத்தின் அரசியல் ஆளுமைகளான கருணாநிதி, ஜெயலலிதா இல்லாத தேர்தல். திமுக தலைவராக ஸ்டாலின் எதிர்கொள்ளும் முதல் தேர்தல். அதிமுக தொண்டர்கள் யார் பக்கம் என்பதை உறுதி செய்ய ஒ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி தரப்பும், டிடிவி தினகரன் தரப்பும் முயன்று வருகின்றனர். அரசியல் ஆளுமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் மூன்று தரப்பினரும் உள்ளது. ஆளுங்கட்சியும், எதிர்கட்சியும் இடைத்தேர்தலுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கின்றன. ஏனெனில், ஆட்சியை தீர்மானிக்கும் தேர்தல் அது.

21 தொகுதிகளிலும் வென்றால், திமுக ஆட்சியை பிடிக்க முடியும். அதனால் வழக்கை காரணம் காட்டாமல் 21 தொகுதிக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டுமென்கிறது, திமுக கூட்டணி. இத்தொகுதிகளை இழந்தாலும் திமுகவிற்கு நஷ்டம் எதுவும் இல்லை. 21 தொகுதிகளிலும் வெல்வது சிரமம் என்றாலும், கிடைக்கும் வரை இலாபம் தான். அதேசமயம் குறைந்தபட்சம் 8 தொகுதிகளில் வெல்ல விட்டால், அதிமுக ஆட்சியை இழக்க நேரிடும். அதனால் தான் கட்சி பிளவு, அதிருப்திகளை சமாளிக்க கூட்டணி சேர்ப்பதில் அதிமுக அதிக அக்கறை காட்டியது.

ஆர்.கே.நகரை போல இடைத்தேர்தலில் வெல்ல வேண்டுமென்ற முனைப்பில் அமமுக உள்ளது. திமுக இடைத்தேர்தலுக்கும், நாடாளுமன்றத்திற்கும் சம முக்கியத்துவம் அளிக்கிறது. ஆனால் அதிமுகவும், அமமுகவும் நாடாளுமன்ற தேர்தலை விட, இடைத்தேர்தலுக்கு அதிக முக்கியத்துவம் தருகின்றன. நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு என்ற புள்ளியில் திமுக கூட்டணி கட்சிகள் அணி திரண்டு நிற்கின்றன. தேர்தல் வெற்றி என்ற அடிப்படையில் அதிமுக கூட்டணி அமைந்துள்ளது. அணிகள் இணைந்து விட்டாலும், மனங்கள் இணையுமா என்பது கேள்விக்குறி தான். ஆதலால் நாடாளுமன்ற தேர்தலில் அதிக இடங்களில் திமுக வென்று முன்னிலை பெறும்.
இடைத்தேர்தலில் குறிப்பிடத்தக்க வெற்றிகளை பெற்று, அதிமுக ஆட்சியை தக்கவைக்கும். தன் இருப்பை பதிவு செய்யும் வகையில் அமமுக வாக்கு வங்கியை பெறும் என்பது அரசியல் கணிப்பாக உள்ளது.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 37 தொகுதிகளில் வென்று நாட்டிலேயே மூன்றாவது பெரிய கட்சியாக வந்த அதிமுகவிற்கு, இத்தேர்தலில் ஏற்றம் பெற வாய்ப்பே இல்லை. ஒரு மக்களவை தொகுதியில் கூட வெல்லாத, திமுகவிற்கு இத்தேர்தலில் இழப்பதற்கு எதுவுமே இல்லை!