கோவை : பதவி உயர்வு பெற்ற கோவை ரயில்வே ஏ.டி.ஜி.பி. சைலேந்திரபாபு, நேற்று மாலை தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாவதற்கு முன்பு, அவசரம் அவசரமாக கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் டி.ஜி.பி.யாக பொறுப்பேற்றுக் கொண்டார்.
கோவை : பதவி உயர்வு பெற்ற கோவை ரயில்வே ஏ.டி.ஜி.பி. சைலேந்திரபாபு, நேற்று மாலை தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாவதற்கு முன்பு, அவசரம் அவசரமாக கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் டி.ஜி.பி.யாக பொறுப்பேற்றுக் கொண்டார்.
தமிழக அரசின் உள்துறை செயலகம் நேற்று 5 உயர் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கி செய்தி குறிப்பு வெளியிட்டிருந்தது. இதில், போக்குவரத்து சாலை பாதுகாப்பு பிரிவில் ஏ.டி.ஜி.பி.,யாக இருந்த கரண்சின்காவுக்கு, இதே துறையில் டி.ஜி.பி.யாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல, சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி.யாக இருந்த விஜயகுமார் சிறப்பு டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். ரயில்வே ஏ.டி.ஜி.பி.யாக இருந்து வரும் சைலேந்திரபாபுவுக்கு ரயில்வே டி.ஜி.பி யாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. காவலர் பயிற்சி ஏ.டி.ஜி.பி.யாக இருந்து வரும் குடவாலா, டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல, குடிமை பொருள் வழங்கல் டி.ஜி.பி.யாக பிரதீப் பிலிப் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை குற்றப்பிரிவு எஸ்.பி. ராஜன் தர்மபுரி மாவட்ட எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தமிழக ரயில்வே கூடுதல் டி.ஜி.பி. சைலேந்திரபாபு நேற்று கோவையில் உள்ள காளப்பட்டி அருகே நடந்த தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த சமயத்தில் சைலேந்திரபாபு உள்ளிட்ட 5 கூடுதல் டி.ஜி.பி.க்களுக்கு அதே துறையில் டி.ஜி.பி. (காவல்துறை தலைமை இயக்குநர்) பதவி உயர்வு அளிக்கப்பட்டு, தமிழக அரசின் உள்துறை செயலகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. மேலும், நேற்று மாலை மக்களவை தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாகும் என்பதால், உடனடியாக தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியிடங்களுக்கு பொறுப்பேற்றுக் கொள்ளவும் அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டது.
இதையடுத்து, தனியார் நிகழ்ச்சி முடிந்த பின்னர், கூடுதல் டி.ஜி.பி. சைலேந்திரபாபு கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்துக்கு வந்து பதவி உயர்வுக்கான ஆவணத்தில் கையெழுத்து இட்டு ரயில்வே டி.ஜி.பி.யாக பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர், அந்த ஆவணம் இணையதளம் மூலம் உள்துறை செயலர் அலுவலகம், காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகத்துக்கு மாநகர காவல்துறையினர் அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிகிறது. பின்னர், மாலை கோவையில் இருந்து சென்னைக்கு ரயில்வே டி.ஜி.பி. சைலேந்திரபாபு புறப்பட்டு சென்றார்.