கோவை : கோவை மாநகரில் அமைந்துள்ள கோனியம்மன் கோவிலின் தேர்திருவிழா வரும் 6-ம் தேதி நடைபெற இருப்பதால், அன்று ஒருநாள் மட்டும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கோவை : கோவை மாநகரில் அமைந்துள்ள கோனியம்மன் கோவிலின் தேர்திருவிழா வரும் 6-ம் தேதி நடைபெற இருப்பதால், அன்று ஒருநாள் மட்டும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கோவை மாநகர் போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது :- பாலக்காடு மற்றும் பொள்ளாச்சி சாலையில் இருந்து உக்கடம் வழியாக நகருக்குள் வரும் அனைத்து வாகனங்களும் ஒப்பணக்கார வீதியில் செல்ல அனுமதி இல்லை. சுங்கம் பைபாஸ் ரயில்வே மேம்பாலம் வழியாக செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.
அவிசாசி சாலை பழைய மேம்பாலத்தில் இருந்தும் மற்றும் லங்கா கார்னரில் இருந்து பாலக்காடு ரோடு செல்லும் அனைத்து இலகுரக வாகனங்களும் பெரிய கடைவீதி, வின்சென்ட் ரோடு வழியாக உக்கடத்தை அடைந்து செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம். பேருந்துகள் வழக்கம் போல, டவுன்ஹால் வழியாக உக்கடம் அடையலாம். ஆனால், மதியம் 1 மணி முதல் 6 மணி வரை டவுன்ஹாலில் இருந்து வைசியாள் வீதிக்கோ, ஒப்பணக்கார வீதிக்கோ வாகனங்கள் செல்ல அனுமதியில்லை.
வைசியாள் வீதி வழியாக பேருர் செல்லும் வாகனங்கள் உக்கடம் சென்று பேரூர் பைபாஸ் ரோடு வழியாக சிவாலயா சந்திப்பை அடைந்து பேருர் செல்ல வேண்டும்.
அவிநாசி சாலை பழைய மேம்பாலத்தில் இருந்து தடாகம் ரோடு, மேட்டுப்பாளையம் ரோடு ஆகியவற்றிற்கு செல்லும் அனைத்து வாகனங்களும் சுக்கிரவார்பேட்டை, பூமார்க்கெட் வழியாக செல்ல வேண்டும்.
தடாகம் ரோட்டில் இருந்து பாலக்காடு மற்றும் பொள்ளாச்சி சாலை செல்லும் அனைத்து வாகனங்களும், பொன்னையாராஜபுரம், சொக்கம்புதூர், ராமமூர்த்தி சாலை வழியாக சிவாலயா தியேட்டர் அடைந்து பேருர் பைபாஸ் ரோடு வழியாக பாலக்காடு சாலை மற்றும் பொள்ளாச்சி சாலைக்கு வேண்டும்.
பேருரில் இருந்து செட்டி வீதி, ராஜவீதி வழியாக வரும் கனரக வாகனங்கள் அனைத்தும் சிவாலயா சந்திப்பு, பேருர் பைபாஸ் ரோடு, உக்கடம் அடைந்தும், பேருந்துகள் மற்றும் இலகுரக வாகனங்கள் சலிவன் வீதி வழியாக காந்திபார்க் அடைந்து நகருக்குள் செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்ல வேண்டும்.
ஆர்.ஜி. வீதி, ராஜ வீதி, கே.ஜி. வீதி மற்றும் வைசியாள் வீதிகளில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை லாரி போக்குவரத்து தடை செய்யப்படுகிறது. மேலும், ராஜ வீதி, ஒப்பணக்கார வீதி, வைசியாள் வீதி, கே.ஜி. வீதி, ஆர்.ஜி. வீதி ஆகிய சாலைகளில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை எந்த வாகனமும் நிறுத்த அனுமதி இல்லை.
இந்த தற்காலிக போக்குவரத்து மாற்றத்திற்கு பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுநர்கள் அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும், இவ்வாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.