கோவை : திமுகவுடன் தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை திருப்திகரமாகவும், மகிழ்ச்சிகரமாகவும் இருக்கின்றது என மதிமுகவின் பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
கோவை : திமுகவுடன் தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை திருப்திகரமாகவும், மகிழ்ச்சிகரமாகவும் இருக்கின்றது என மதிமுகவின் பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
இந்தியாவை மீட்போம், தமிழகத்தைக் காப்போம், அரசியல் எழுச்சி மாநாடு இன்று மாலை கொடிசியா அரங்கம் அருகில் உள்ள மைதானத்தில் நடக்கிறது. இதில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், சி.பி.ஐ பொது செயலாளர் சுதாகர்ரெட்டி, தேசிய செயலாளர் டி.ராஜா, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, மதிமுக பொது செயலாளர் வைகோ,விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், திராவிட கழக தலைவர் கி.வீரமணி, சி.பி.ஐ.(எம்) மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர்.
இதில், கலந்து கொள்ள விமானம் மூலம் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கோவை வந்தடைந்தார். அப்போது, அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அவர் கூறியதாவது ;- ஸ்டெர்லைட் விவகாரம் தொடர்பாக, சமூக ஆர்வலர் முகிலன் காணாமல் போய் 12 நாட்களுக்கு மேலாகி விட்டது. இந்நிலையில், முகிலன் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு இருந்தால், ஸ்டெர்லைட் நிறுவனம் அல்லது போலீசார் தான் காரணமாக இருக்க முடியும். அவர் காணாமல் போனது தொடர்பாக, முகிலன் மகன் ஹென்றி டிபேன் போன்றோர் காவல் துறையில் புகார் அளித்துள்ளனர்.
தமிழகத்தில் நடக்காத மர்மம் முகிலன் விவகாரத்தில் நடைபெற்று கொண்டு இருக்கின்றது. மேலும், அரசின் நடவடிக்கை சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. முகிலனுக்கு ஏதாவது நடந்து இருந்தால், அதற்கு அரசுதான் பொறுப்பு. ஒருவேளை அவ்வாறு ஏதாவது நடந்திருப்பின், அரசுக்கு இது கேடாக அமையும்.
வரும் 1ம் தேதி பிரதமர் மோடி கன்னியாகுமரி வருகிறார். அப்போது, கருப்பு கொடி காட்டப்படும். முல்லை பெரியாரில் புதிய அணையைக் கட்ட ஆய்வறிக்கை தயாரிக்க அனுமதி கொடுத்தது, நீட் விவகாரம்,10 சதவீத இட ஒதுக்கீடு விவகாரம், ஹைட்ரோ கார்பன் பிரச்சினை, கஜா புயலில் பாதிக்கப்பட்டவர்களைப் பார்க்க வராதது, உயர் மின்கோபுர விவகாரம், நியூட்ரினோ திட்டம், சமஸ்கிருதம் திணிப்பு போன்றவற்றுக்கு எதிராகக் கருப்பு கொடி காட்டப்படும், இவ்வாறு அவர் பேசினார்.
மேலும், கருப்பு கொடி காட்டுவது வெற்று போராட்டம் என்ற தமிழிசையின் விமர்சனம் குறித்த கேள்விக்கு, 'அவருக்கு கருத்து சொல்ல உரிமை இருக்கின்றது' என வைகோ பதிலளித்தார்.
"கூட்டணி பேச்சு வார்த்தையில், திமுகவுடன் திருப்திகரமாகவும், மகிழ்ச்சிகரமாகவும் பேச்சுவார்த்தை அமைந்துள்ளது. திருச்சியில் போட்டியிடுவதாக வெளியான தகவலில் உண்மையில்லை. இன்னும் ஆட்சிமன்ற குழு கூடவே இல்லை," என்றார் வைகோ.