கோவை : கோவையில் விதியை மீறி இருசக்கர வாகனத்தை வணிகரீதியாக ஓட்டி வந்த பைக் டாக்சிகளை, தனியார் கால் டாக்ஸி மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் பிடித்து மத்திய வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
கோவை : கோவையில் விதியை மீறி இருசக்கர வாகனத்தை வணிகரீதியாக ஓட்டி வந்த பைக் டாக்சிகளை, தனியார் கால் டாக்ஸி மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் பிடித்து மத்திய வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
ரேப்பிட்டோ பைக் டாக்ஸி நிறுவனமானது கோவை காந்திபுரம் அருகே உள்ளது. இந்த பைக் டாக்ஸியை பொதுமக்கள் செயலி மூலம் புக் செய்து தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்கின்றனர். இந்த நிறுவனமானது, கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக கோவையில் செயல்பட்டு வருகிறது. இந்த பைக் டாக்ஸி முறைக்கு கோவையில் தொடக்கத்திலிருந்தே ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் கால் டாக்ஸி ஓட்டுநர்கள் மத்தியில் எதிர்ப்புகள் இருந்து வருகிறது. மேலும், மிகவும் குறைந்த விலையில் பயணிகளை ஏற்றிச் செல்வதால், தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக ஆட்டோ மற்றும் கால் டாக்சி ஓட்டுநர்கள் குற்றம் சுமத்தி வந்தனர்.

தமிழகத்தில் பைக் டாக்ஸி முறையை செயல்படுத்த எந்த விதிமுறைகளும் வரவில்லை. ஆனால், இந்த பைக் டாக்ஸி நிறுவனத்தினர், போக்குவரத்து விதிகளை மீறி பாதுகாப்பில்லாத பயணத்தை பொதுமக்களுக்கு தருவதாக கூறப்படுகிறது. மேலும், சொந்த உபயோகத்துக்குப் பயன்படுத்தும் பதிவுகள் கொண்ட இருசக்கர வாகனங்களை வணிகரீதியாக விதியை மீறி பயன்படுத்தி வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த நிலையில், இன்று காலை பைக் டாக்ஸி செயலி மூலம் இருசக்கர வாகனத்தை புக் செய்து விதியை மீறி வாகனத்தை ஓட்டிய இருசக்கர வாகனங்களை மடக்கி பிடித்த கால் டாக்ஸி ஓட்டுநர்கள், அவற்றை கோவை மத்திய வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஒப்படைத்தனர். இதனால், வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பரபரப்பான சூழல் நிலவியது.

இதனிடையே, விதிகளை மீறி செயல்பட்ட இருசக்கர வாகன ஓட்டிகள் மீதும், வாகனங்கள் மீதும் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.