கோவை : ரூ. 47 கோடி செலவில் வெள்ளியங்காடு முதல் மஞ்சூர் வரையிலான சாலை மேம்பாடு திட்டத்திற்கான அடிக்கல்லை அமைச்சர் எஸ்.பி வேலுமணி நாட்டினார்.
கோவை : ரூ. 47 கோடி செலவில் வெள்ளியங்காடு முதல் மஞ்சூர் வரையிலான சாலை மேம்பாடு திட்டத்திற்கான அடிக்கல்லை அமைச்சர் எஸ்.பி வேலுமணி நாட்டினார்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே வெள்ளியங்காடு முதல் மஞ்சூர் வரையிலான 42 கிலோமீட்டர் தூர சாலையினை மேம்படுத்த தமிழக அரசால் ரூ. 47 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, இதற்கான ஒப்பந்தப்புள்ளி கடந்த மாதம் கோரப்பட்டு, இன்று அடிக்கல் நாட்டு விழா வெள்ளியங்காடு கிராமத்தில் நடைபெற்றது. இதில், பங்கேற்ற தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, திட்டப்பணி துவக்கத்திற்கான அடிக்கல்லை நாட்டியதுடன், பூமி பூஜையிலும் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ், கோவை மாவட்ட ஆட்சியர் ராஜாமணி, எம்.எல்.ஏ.,க்கள் சின்னராஜ், அருண்குமார், நெடுஞ்சாலைத்துறை உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இதன் பின்னர், மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, அ.தி.மு.க., சார்பில் வெள்ளியங்காடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வழங்கினார்.
இதைத் தொடர்ந்து, விழாவில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பேசியதாவது :- எங்கிருந்தோ வந்து இத்தொகுதியில் நின்று எம்.பி.,யாக வெற்றி பெற்று, மத்திய அமைச்சராகவும் பதவியேற்ற ஆ. ராசா (மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்டது) தனது தொகுதி மக்களுக்காக எதுவுமே செய்யவில்லை. இவர் மட்டுமல்ல ஒட்டுமொத்தமாக மத்தியிலும், மாநிலத்திலும் தி.மு.க., ஆட்சிப்பொறுப்பிலிருந்த காலகட்டத்தில் தமிழகத்திற்கு எந்த நன்மையினையும் செய்யவில்லை.

முல்லைப்பெரியாறு பிரச்சனை, காவிரிநீர் பிரச்சனை, மீனவர்கள் பிரச்சினை, கச்சத்தீவு பிரச்சனை என எதற்குமே தீர்வு காணப்படவில்லை. இலங்கை தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டது தான் நடைபெற்றது. அத்திக்கடவு - அவினாசி திட்டம் தொடங்கப்படவுள்ளது. இத்திட்டத்தில் விடுபட்ட பகுதிகளைச் சேர்க்க எழுந்துள்ள கோரிக்கை விரைவில் இணைக்கப்படும், என்றார்.