திருப்பூர் : பாரத் பெட்ரோலிய நிறுவனத்தின் ஐ.டி.பி.எல் பைப்லைன் திட்டத்தை நெடுஞ்சாலை ஓரங்களில் அமைக்க வலியுறுத்தி விவசாயிகள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடும்பத்துடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் : பாரத் பெட்ரோலிய நிறுவனத்தின் ஐ.டி.பி.எல் பைப்லைன் திட்டத்தை நெடுஞ்சாலை ஓரங்களில் அமைக்க வலியுறுத்தி விவசாயிகள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடும்பத்துடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் ஐ.டி.பி.எல். (IDPL) என்ற பைப் லைன் திட்டத்தின் மூலம் கோவை மாவட்டம் இருகூர் பகுதியிலிருந்து கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி வழியாக கர்நாடக மாநிலம் தேவனகொந்தி பகுதிக்கு 294 கிலோ மீட்டர் தொலைவிற்கு ஆண்டுக்கு 3.52 மில்லியன் டன் பெட்ரோல் கொண்டு செல்லும் விதமாக திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இதற்கான ஆரம்பக்கட்ட பணிகளாக, விவசாய நிலங்களில் அளவிடும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

இந்த திட்டத்தினால், கோவை, திருப்பூர், ஈரோடு உள்பட 7 மாவட்டங்களைச் சேர்ந்த 40,000-க்கும் மேற்பட்ட விவசாயிகளின் குடும்பங்கள் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்து வருகின்றனர். முன்னதாக, எரிவாயு கொண்டு செல்ல கெயில் பைப்லைன் அமைக்கத் திட்டமிடப்பட்டு, விவசாயிகளின் போராட்டம் காரணமாக, கெயில் திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அதே வழித்தடத்தில் புதிதாக பெட்ரோல் பைப் லைன் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில், விவசாய நிலங்களை தவிர்த்து, நெடுஞ்சாலை ஓரங்களில் இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க விவசாயிகள் குடும்பத்துடன் வந்தனர். அனைத்து விவசாயிகளும் மாவட்ட ஆட்சியரை சந்திக்க போலீசார் அனுமதி மறுத்ததையடுத்து, விவசாயிகளுக்கும் போலீசாருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனையடுத்து, விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் வாயில் முன்பாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், ஆட்சியரை சந்திக்க அனுமதியளித்ததையடுத்து, விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமியை சந்தித்து மனு அளித்தனர்.