கோவை : கோவையை சேர்ந்த அருணாச்சலம் முருகானந்தம், தயாரித்த மலிவு விலை நாப்கின்களை மையப்படுத்திய 'ப்ரீயட். தி என்ட் ஆஃப் சென்டென்ஸ்' ஆவணப்படம், 2019 ஆஸ்கார் விருதுக்கான குறு ஆவணப்படப் பிரிவில் விருது வென்றுள்ளது.
கோவை : கோவையை சேர்ந்த அருணாச்சலம் முருகானந்தம், தயாரித்த மலிவு விலை நாப்கின்களை மையப்படுத்திய 'ப்ரீயட். தி என்ட் ஆஃப் சென்டென்ஸ்' ஆவணப்படம், 2019 ஆஸ்கார் விருதுக்கான குறு ஆவணப்படப் பிரிவில் விருது வென்றுள்ளது.
திரைத்துறையின் உயரிய விருதான ஆஸ்காரின் 91வது விருது வழங்கும் விழா நேற்று அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. இதில், பல்வேறு பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்பட்டது. அதில், இந்திய பெண்கள் குறித்து எடுக்கப்பட்ட ப்ரீயட். தி என்ட் ஆஃப் சென்டென்ஸ் சிறந்த ஆவண குறும்படத்திற்கான ஆஸ்கார் விருதினை வென்றுள்ளது.
இந்த படம், கோவையை சேர்ந்த அருணாச்சலம் முருகானந்தம், ஏழைப் பெண்களுக்காகத் தயாரித்த மலிவு விலை நாப்கின்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டது. இதில், இந்திய பெண்கள் மற்றும் அவர்கள் மாதவிடாய் காலங்களில் சந்திக்கும் பிரச்சினைகளே அடிப்படை கதைக்கருவாகும். 2018ம் ஆண்டு ஏப்ரல் 5 ம் தேதி வெளியிடப்பட்ட இந்த படத்தை ராக்யா செக்தாப்சி இயக்கி இருந்தார். முன்னதாக, பாலிவுட் இயக்குநர் பால்கி இவரது கதையை மையப்படுத்தி பேட்மேன் என்ற படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அருணாச்சலம், கிராமத்திலும், வீட்டிலும் பெண்கள் மாதவிடாய் காலத்தில் என்ன விதமான துன்பங்களை அனுபவிக்கிறார்கள், சுகாதாரமற்ற வழிமுறைகளைப் பயன்படுத்துகிறார்கள், மூடநம்பிக்கைகளில் இருக்கிறார்கள் என்பதைப் பார்த்து தான் மலிவு விலையில் நாப்கின்களை தயாரிக்கும் முயற்சியில் இறங்கினார்.
இதையடுத்து, மிகக் குறைந்த விலையில் நாப்கின் தயாரிக்கும் எந்திரத்தை உருவாக்கி, நாப்கின் தயாரித்து வழங்கி வருகிறார். இவர் உருவாக்கிய எந்திரத்தைப் பயன்படுத்தி இன்று பல்வேறு கிராமங்களில் பெண்கள் நாப்கின்களை குறைந்த விலைக்கு விற்பனை செய்து சம்பாதித்து வருகின்றனர். இவரின் சேவையையும், சாதனையையும் பாராட்டி மத்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கியது. இந்நிலையில், இவரின் கதையைப் பின்னணியாகக் கொண்ட ஆவணப்படமும் ஆஸ்காரை வென்று, இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளது.