கோவை : அ.தி.மு.க., பா.ம.க. மற்றும் பா.ஜ.க., கூட்டணி இயற்கையாக அமைந்ததாகவும், இது வெற்றி கூட்டணி என்றும் கோவையில் நடந்த நலத்திட்ட வழங்கும் விழாவில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.
கோவை மாவட்ட அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கலந்து கொண்டு, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர், அவர் பேசியதாவது :- தலைவர்கள் பிறந்தநாளில் தி.மு.க.,வினர் பொதுமக்களிடம் வசூல் செய்வார்கள். அ.தி.மு.க.,வினர்தான் பொதுமக்களுக்கு நலத்திட்டங்களை வழங்குவார்கள். கட்சியையும், ஆட்சியையும் முதலமைச்சர் எடப்பாடி மற்றும் துணை முதலமைச்சர் சிறப்பாக நடத்தி வருகின்றனர். இந்த
ஆட்சியை கலைக்க தி.மு.க., தலைவர் ஸ்டாலின் முயற்சித்து வருகிறார். தி.மு.க., தலைவர் மு.க.ஸ்டாலினின் கிராம சபா கூட்டம் என்பது வெறும் டிராமா. தேர்தலுக்காக ஸ்டாலின் கிராமங்களுக்கு செல்கிறார். மேலும், ஸ்டாலினின் ஒரே கொள்கை முதலமைச்சர் நாற்காலியில் அமர்வது தான். அது எக்காலத்திலும் நடக்காது.
அ.தி.மு.க., பா.ம.க. மற்றும் பா.ஜ.க., கூட்டணி இயற்கையாக அமைந்தது. நல்லது செய்தால் நல்லது நடக்கும். உயிரைக் கொடுத்து ஜெயலலிதா ஆட்சியை கொடுத்துள்ளார். மேலும், அ.தி.மு.க., கூட்டணி நல்ல கூட்டணி, அருமையான கூட்டணி, வெற்றி கூட்டணி. இந்த கூட்டணிக்கு வாக்களிக்க மக்கள் தயாராகி விட்டார்கள். 40 தொகுதியிலும் அ.தி.மு.க., கூட்டணி வெல்லும். அ.தி.மு.க.,வின் இந்த கூட்டணியை பார்த்து ஸ்டாலின் பயப்படுகிறார். வைகோ ஸ்டாலினை விமர்சித்ததை விட, வேறு யாரும் விமர்சித்திருக்க முடியாது. இந்த வெற்றி கூட்டணியைப் பொறுத்து கொள்ள முடியாமல் பா.ம.க.,வை ஸ்டாலின் விமர்சித்து வருகிறார், இவ்வாறு அமைச்சர் எஸ்.பி., வேலுமணி கூறினார்.