கோவை : தமிழக மக்களின் மனதில் நீங்க இடம் பெற்ற எம்.ஜி.ஆரின் புனரமைக்கப்பட்ட நினைவு இல்லத்தை வரும் 26-ம் தேதி கேரள ஆளுநர் சதாசிவம் திறந்து வைக்க இருப்பதாக மனிதநேய ஐ.ஏ.எஸ் அகாடமியின் தலைவர் சைதை துரைசாமி தெரிவித்துள்ளார்.
கோவை : தமிழக மக்களின் மனதில் நீங்க இடம் பெற்ற எம்.ஜி.ஆரின் புனரமைக்கப்பட்ட நினைவு இல்லத்தை வரும் 26-ம் தேதி கேரள ஆளுநர் சதாசிவம் திறந்து வைக்க இருப்பதாக மனிதநேய ஐ.ஏ.எஸ் அகாடமியின் தலைவர் சைதை துரைசாமி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சருன், அ.தி.மு.க.,வின் நிறுவனருமான எம்.ஜி.ராமச்சந்திரனின் நினைவு இல்லம் பாலக்காடு மாவட்டம், வடவனூரில் அமைந்துள்ளது. இந்த இல்லம் பழுதடைந்து முட்புதர்களால் மண்டிக்கிடந்தது. இதை பத்திரிக்கை வாயிலாக அறிந்த உலக எம்.ஜி.ஆர். பேரவைத் தலைவரும், மனித நேய ஐ.ஏ.எஸ் அகடாமியின் தலைவருமான சைதை துரைசாமி, புனரமைக்க முன்வந்தார். இதனையடுத்து, எம்.ஜி.ஆரின் நினைவு இல்லம்,பழமை மாறாமல், கடந்த ஒராண்டுக்கு மேல் புனரமைக்கப்பட்டு நிறைவு பெற்ற நிலையில், திறப்பு விழா குறித்த பத்திரிக்கையாளர் சந்திப்பு கோவை பத்திரிக்கையாளர் மன்றத்தில் இன்று நடைபெற்றது.

அப்போது, சைதை துரைசாமி பேசியதாவது :- பாரத் ரத்னா எம்.ஜி.ஆர் தனது இளம் வயதில் கேரள மாநிலம் பாலக்காட்டிலுள்ள வடவனூர் இல்லத்தில் வாழ்ந்துள்ளார். அந்த இல்லத்தை புனரமைக்க மனிதநேய அறக்கட்டளை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனையடுத்து, அங்கிருந்த பஞ்சாயத்து அங்கன்வாடி மையம், உணவுக்கூடம், விளையாட்டுத்திடல், சுவர் ஓவியம் என பல்வேறு சிறப்பம்சங்களுடம் பழமை மாறாமல் புனரமைக்கப்பட்டது. மேலும், எம்.ஜி.ஆரின் மார்பளவு பளிங்கு சிலை, அவரது தாய் சத்தியபாமா, தந்தை கோபாலமேனன் ஆகியோரது பளிங்கு சிலைகளும் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதிகளவில் சபரிமலைக்கு வரும் தமிழக பக்தர்கள் இங்கு வந்து ஒரு நாள் தங்கும் வகையிலும், எம்.ஜி.ஆரை பற்றி தெரிந்துகொள்ள புகைப்பட கண்காட்சி, அவர் நடித்த 136 படங்களின் ஒலிப்பேழைகள் மற்றும் உலகத்தலைவர்கள் எம்.ஜி.ஆர் பற்றி கூறிய கருத்துக்கள், சுப காரியங்கள் செய்ய மண்டபம் கட்டப்பட்டுள்ளது. மேலும், எம்.ஜி.ஆரை பற்றி அதிகளவிலான எழுதப்பட்ட புத்தகங்களும் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது. நுழைவு வாயிலில் ராஜா சிங்கம் கற்சிலையாக வைக்கப்பட்டுள்ளது. புல்வெளிகள், மரம், செடி, கொடிகள், கிணறு என எல்லா வகையிலும் அமைதியான சூழ்நிலையில் இல்லம் புனரமைக்கப்பட்டுள்ளது.

இந்த இல்லத்தில் எம்.ஜி.ஆரைப் பற்றி தெரிந்துகொள்ள இளைஞர்களுக்கான கருத்தரங்கம், பயிற்சிகள், அவரைப்பற்றிய ஆய்வுகள் என பல்வேறு விதமான சிறப்பு நிகழ்வுகள், புதுமையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அனைவரும் நினைவு இல்லத்தை விரும்பும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதால், புது அனுபவத்தை எம்.ஜி.ஆர். ரசிகர்களுக்கு கொடுக்கும். எம்.ஜி.ஆருக்காக புகழை பரப்புவதற்கு யாரெல்லாம் இருக்கிறார்களோ, அவர்களை சரியாக பயன்படுத்தி சுமார் ரூ. 1 கோடி செலவில் புனரமைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில், கேரள ஆளுநர், ஒய்வு பெற்ற காவல்துறை அதிகாரிகள் மற்றும் கட்சி பாகுபாடு இல்லாமல், எம்.ஜி.ஆரை நேசிக்கும் அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர்.
மேலும், 15 ஆயிரம் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பினை உருவாக்கும் முயற்சியில் மனிதநேய ஐ.ஏ.எஸ் அகாடமி மேற்கொண்டு வருகிறது. சிவில் சர்வீஸ் தேர்வுக்கு வீட்டிலிருந்த படியே போட்டிக்கு தயாராகும் வகையில், பயிற்சி அளித்து வரப்படுகிறது. மேலும், தமிழக மாணவர்கள் அதிகளவில் நீட் தேர்வில் வெற்றி பெற்று உள்ளனர், எனக் கூறினார்.
இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது, எம்.ஜி.ஆரின் உறவினர் பிரவீன், பாண்டியன், சைதை துரைசாமி, முன்னாள் காவல்துறை தலைவர் அலெக்ஸாண்டர், அன்புச்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டனர்.