கோவை : மதுக்கரை வனப்பகுதியில் கால்நடைகளை வேட்டையாடி, மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தையை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்தனர்.
கோவை : மதுக்கரை வனப்பகுதியில் கால்நடைகளை வேட்டையாடி, மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தையை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்தனர்.

கோவை மாவட்டம், மதுக்கரை வனச்சரகத்தில் அமைந்துள்ள பெருமாள்கோவில் பகுதியில், ஆறு வயது மதிக்கத்தக்க சிறுத்தை சுற்றித் திரிந்துள்ளது. அங்குள்ள, கால்நடைகளை வேட்டையாடி பசியாறி வந்துள்ளது. ஆகவே, இதனைப் பிடிக்க 20 நாட்களுக்கு முன்னதாகவே, கூண்டு வைக்கப்பட்டது.
இதுகுறித்து மாவட்ட வனத்துறை அதிகாரி டி.வெங்கடேஷ் கூறுகையில், "இந்த சிறுத்தையால், 5 ஆடுகள் மற்றும் சில கால்நடைகள் வேட்டையாடப்பட்ட பின்பு தான், கூண்டு வைத்தோம்.

இந்நிலையில் இன்று காலை தனியார் தோட்டத்தில் வைத்திருந்த கூண்டில் சிறுத்தை பிடிபட்டது. இந்த தோட்டம் வனப்பகுதியில் இருந்து 25 மீட்டர் தொலைவிலுள்ளது. மேலும், இதனை சத்தியமங்கலம் தெங்குமரஹடா வனப்பகுதியில் கொண்டு விடவிருக்கிறோம்.
இது மதுக்கரை பகுதியில் பிடிக்கப்படும் இரண்டாவது சிறுத்தையாகும். முன்னதாக, கடந்த வருடம் டிச., 5ம் தேதி 7 வயது மதிக்கத்தக்க சிறுத்தை ஒன்றினை மோளப்பாளையம் கிராமத்திற்கு அருகில் பிடித்து, சிறுமுகை வனப்பகுதியில் விட்டோம்,"என்றார்.

இது குறித்து அனுபவமிக்க வன அதிகாரிகள் கூறும் போது, சிறுத்தை, புலி போன்ற விலங்குகள் அவைகளின் இரையை மோப்பம் பிடித்து வரக்கூடியவை. எனவே, மக்கள் காட்டுப்பகுதிக்கு வெகு தொலைவில் வைத்து தங்கள் கால்நடைகளை வளர்த்தால் மனித-விலங்கு முரண்களைத் குறைக்க முடியும்." என்றனர்.
இதைத் தொடர்ந்து, மதுக்கரையில் கூண்டு வைத்து பிடிக்கப்பட்ட சிறுத்தையை, வாகனம் மூலம் கொண்டு சென்று, சத்தியமங்கலம் தெங்குமரஹாடா பகுதியில் வனத்துறையினர் விட்டனர்.