கோவை : சர்வதேச தாய்மொழி தினத்தை முன்னிட்டு, கோவையில் பறை இசையுடன் நடைபெற்ற உலக தாய்மொழி தினப் பேரணியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பங்கேற்றனர்.
கோவை : சர்வதேச தாய்மொழி தினத்தை முன்னிட்டு, கோவையில் பறை இசையுடன் நடைபெற்ற உலக தாய்மொழி தினப் பேரணியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பங்கேற்றனர்.
உலகம் முழுவதும் பிப்ரவரி 21-ம் தேதி சர்வதேச தாய்மொழி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. 1925-ம் ஆண்டு அப்போதைய கிழக்கு பாகிஸ்தான் தலைநகர் தாக்காவில் வங்கதேச மொழியை ஆட்சி மொழியாக அறிவிக்கக்கோரி நடத்தப்பட்ட போராட்டத்தில் ஏராளமான மாணவர்கள் உயிரிழந்தனர். அவர்களின் நினைவாக உலகளாவிய முறையில் மொழி தொடர்பாக நினைவுகூறும் நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது.

1990-ம் ஆண்டு யுனெஸ்கோ சார்பில் நடந்த பொது மாநாட்டின் 30-வது அமர்வில் பிப்ரவரி 21-ம் தேதி அனைத்து உலக தாய்மொழி தினமாக அறிவிக்கப்பட்டது. இதனையொட்டி, 2000-ம் ஆண்டு முதல் உலக தாய்மொழி நாளாக உலகின் பல பகுதிகளில் கொண்டாடி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, தொன்மை வாய்ந்த மொழிகளில் ஒன்றான தமிழ்மொழியையும் கொண்டாடி வருகின்றனர்.
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தர் சி.சுப்ரமணியம் தலைமையில் 2006-ம் ஆண்டு முதல் தற்போது வரை தமிழ் இலக்கிய பண்பாட்டு கழகங்களின் கூட்டமைப்புகளோடு இணைந்து பேரணி மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இன்று 21ம் ஆண்டு உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு பல்வேறு கல்லூரி மற்றும் பள்ளிகளை சேர்ந்த 3,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்ற பேரணி நடைபெற்றது. இசை முழங்க மகளிர் தொழில்நுட்ப கல்லூரியில் தொடங்கிய இந்தப் பேரணி வ.ஊ.சி மைதானம் வரை சென்றது. இப்பேரணியை சிரவை ஆதீனம் இராமானந்த குமரகுருபர அடிகளார் துவக்கி வைத்தார். பேரணியில் பங்கேற்றவர்கள் 'வாழிய வாழிய வாழியவே, எங்கள் தமிழ்மொழி வாழியவே. மொழிகளில் தொன்மையான மொழி, தமிழ் மொழியே' என்ற முழக்கங்களை எழுப்பினர்.
இந்தப் பேரணியில் பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், கூலவாணிகர் இராமசாமி, புலவர் அப்பாவு, கனகசுப்ரமணியம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
