கோவை : கடந்த இரண்டு மாதங்களாக, கருப்பராயன் கோவில் தெரு பகுதியில் குடிநீரில், சாக்கடை நீர் கலப்பதாகவும், சரியான முறையில் குடிநீர் வழங்கப்படவில்லை எனவும் குற்றம் சாட்டியுள்ள அப்பகுதி மக்கள், விரைந்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை : கடந்த இரண்டு மாதங்களாக, கருப்பராயன் கோவில் தெரு பகுதியில் குடிநீரில், சாக்கடை நீர் கலப்பதாகவும், சரியான முறையில் குடிநீர் வழங்கப்படவில்லை எனவும் குற்றம் சாட்டியுள்ள அப்பகுதி மக்கள், விரைந்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை மாவட்டம், புலியகுளத்திற்கு அருகில் இருக்கும் கருப்பராயன் கோவில் பகுதியில் கடந்த சில மாதங்களாக குடிநீரில் துர்நாற்றம் வீசியுள்ளது. மேலும், குடிநீரும் அசுத்தமாகவே வந்துள்ளது. இது குறித்து புகார் அளித்ததைத் தொடர்ந்து இந்த பகுதி மக்களுக்கான குடிநீர் டேங்கர் லாரிகள் மூலம் விநியோகிக்கப்பட்டு வந்துள்ளது.
மேலும், 6 முதல் 8 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் வந்துள்ளதால் அப்பகுதியில் குடிநீருக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, நடவடிக்கை மேற்கொள்ள வேண்டி குடியிருப்பை சேர்ந்தவர்கள் அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளனர். ஆனால், அதற்கு தக்க நடவடிக்கைகள் இன்னும் மேற்கொள்ளப்படவில்லை.

"இரண்டு மாதங்களுக்கு முன் குடிநீருடன் கழிவு நீர் கலந்து வந்தது. இதையடுத்து, நாங்கள் புகார் அளித்ததைத் தொடர்ந்து குடிநீர் விநியோகத்தை நிறுத்தினர். இதையடுத்து, நாங்கள் அன்றாட வேலைகளுக்கு பயன்படுத்தும் தண்ணீரை, குடிநீராக அளித்து வந்தனர். இந்நிலையில், டேங்கர் லாரியும் வாரத்திற்கு ஒரு முறை தான் வருகிறது. ஒரு குடும்பத்திற்கு 4 முதல் 5 குடங்களில் குடிநீரை கொடுப்பது மிகுந்த பற்றாக்குறையை உருவாக்குகிறது. இது பற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் நாங்கள் பல புகார்களை அளித்துள்ளோம். இரண்டு மாதங்களாகியும் இந்த பிரச்சினை முடிவுக்கு வரவில்லை," என்கிறார் அந்த பகுதியை சேர்ந்த அனிதா.

இதைப் போலவே, அந்த பகுதிக்கு அருகில் உள்ள அந்தோணியார் தெரு, விநாயகர் கோவில் தெரு மற்றும் அதனுடன் இணைந்த தெருக்களிலும் குடிநீர் பிரச்சினை இருந்து வருகிறது.
இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்கும் போது, "இந்த குடிநீர் பிரச்சினையை சரி செய்ய இருமுறை முயற்சி செய்துள்ளோம். ஆனாலும், கழிவு நீர், குடிநீருடன் தொடர்ந்து கலந்து வருகிறது. இதையொட்டி, மீண்டும் சரிசெய்யும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். விரைவில் சரிசெய்யப்படும், என்றனர்.