கோவை : கோவைக்கு வந்து செல்லும் ரயில்கள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தும் சம்பவம் சமீப காலமாக அதிகரித்து வரும் நிலையில், சமூகவிரோதிகளை கைது செய்யும் பணியில் போலீசார் தீவிரமாகியுள்ளனர்.
கோவை : கோவைக்கு வந்து செல்லும் ரயில்கள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தும் சம்பவம் சமீப காலமாக அதிகரித்து வரும் நிலையில், சமூகவிரோதிகளை கைது செய்யும் பணியில் போலீசார் தீவிரமாகியுள்ளனர்.
கோவையிலிருந்து பிற மாவட்டங்களுக்கு அல்லது மாநிலங்களுக்கு செல்லும் ரயில்கள் மற்றும் பிற மாவட்டங்கள் அல்லது மாநிலங்களில் இருந்து கோவையை நோக்கி வரும் ரயில்கள் மீது சமூகவிரோதிகள் கற்களை வீசும் சம்பவம் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக, இந்த கல்வீச்சு சம்பவங்கள் வடகோவை, பீளமேடு, இரத்தினபுரி, சிங்காநல்லூர், இருகூர் ஆகிய பகுதிகளில் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. இந்த சம்பவத்தை தடுக்க ரயில்வே போலீசாரும் அந்தந்த காவல் எல்லைக்குட்பட்ட போலீசாரும் தொடர்ந்து முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும், சமூக விரோதிகளின் ஆட்டம் குறைந்தபாடில்லை.
நேற்று மதியம் கோவையிலிருந்து சென்னைக்கு சதாப்தி ரயில் புறப்பட்டு சென்றது. ஞாயிற்றுக்கிழமை என்பதால் இந்த ரயிலில் கோவையில் இருந்து வெளியூர்களுக்கு செல்பவர்களின் கூட்டம் அதிகளவில் இருந்தது. மேலும், இந்த ரயிலானது மாலை 3 மணியளவில் பீளமேடு பகுதியிலிருந்து இருகூர் நோக்கி சென்று கொண்டிருந்த போது, மர்ம நபர்கள் ரயில் மீது கற்களை சரமாரியாக வீசினர். இதில் கற்கள் ரயில் பெட்டிகளின் மீது விழுந்ததில் கண்ணாடிகளும் சிதறியது. அதிர்ஷ்டவசமாக பயணிகள் காயம் இன்றி தப்பினர்.
அதேபோல, அதே வழியில் சென்னை நோக்கி சென்ற கோவை எக்ஸ்பிரஸ் ரயில் மீதும் மர்மநபர்கள் கல்வீசினர். இதனால், ரயிலில் இருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். கடந்த மாதமும் இதேபோல மர்ம நபர்கள் ரயிலின் மீது கற்களை வீசிவிட்டு தப்பி ஓடினர். மீண்டும் இந்த சம்பவம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், இந்த சமூக விரோதிகளின் செயலைக் கட்டுப்படுத்தவும், இந்த சம்பவங்களில் ஈடுபட்டு வரும் நபர்களை கைது செய்யவும் போலீசார் விரைந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.