கோவை : கோவை மாநகரை விபத்தில்லா நகரமாக மாற்ற உயிர் அமைப்பின் சார்பில் அதிநவீன கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.
கோவை : கோவை மாநகரை விபத்தில்லா நகரமாக மாற்ற உயிர் அமைப்பின் சார்பில் அதிநவீன கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் வருடத்திற்கு 1.7 லட்சம் மக்கள் சாலை விபத்துகளில் உயிரிழக்கின்றனர். இது உலகின் மொத்த இறப்பு சதவிகிதத்தில் 10 சதவீதம் ஆகும். உலகிலேயே சாலை விபத்துக்களில் இந்தியா தான் முதலிடத்தில் உள்ளது. மாநில அளவில் தமிழகமும், மாவட்ட அளவில் கோவையும் இரண்டாவது இடத்தில் உள்ளது. இப்படி நடைபெறும் விபத்துகளில் உயிரிழப்பு ஏற்படுகிறது.
சாலை விதிமீறல்களைக் கட்டுப்படுத்தி, விலை மதிப்புமிக்க மனித உயிர்களைப் பாதுகாக்க கோவையில் அதிநவீன கேமராக்கள் மாநகர சிக்னல்களில் நிறுவப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழாவினை அமைச்சர் எஸ்.பி வேலுமணி அண்ணா சிலை அருகே அமைக்கப்பட்ட நிகழ்ச்சி மேடையில் தொடங்கி வைத்தார்.மேலும், இந்த கேமாராக்கள் இரவில் மிகக் குறைந்த ஒளியில் இயங்கக் கூடியது. அதிக திறன் வாய்ந்தவை.

அதேபோல, அதிவிரைவாக செல்லும் வாகனங்களின் எண்களையும் இதனால் துல்லியமாக படம் பிடிக்க இயலும். இந்த நவீன கண்காணிப்பு கேமராக்கள் முதற்கட்டமாக ஜெயம் பேக்கரி சந்திப்பு, எல்ஐசி சந்திப்பு, குப்புசாமி நாயுடு மருத்துவமனை சந்திப்பு, அண்ணா சிலை சந்திப்பு, லட்சுமி மில் சந்திப்பு உள்ளிட்ட சந்திப்புகளில் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், இதன் அடுத்தகட்டமாக, மாநகரின் அனைத்து சிக்னல்களிலும் செயல்படுத்தப்படும் என இந்த நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர். இதற்கிடையில், கோவை மாநகர போக்குவரத்து காவலர்களுக்கு 4ஜி வைப்பை வசதியுடைய சட்டையில் அணியும் கேமராக்கள் வழங்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் அமைச்சர் எஸ் பி வேலுமணி பேசியதாவது ;- சாலை விபத்தில் இந்தியாவில் தமிழகம் 2வது இடத்தில் உள்ளது. அதேபோல, கோவையும் முன்னிலையில் உள்ளது. இதனால் ஏற்படும் உயிரிழப்பை கட்டுப்படுத்த இந்த நவீன கேமராக்கள் உதவும். சாலை விபத்துகளைக் கட்டுப்படுத்த மேம்பாலம் கட்டும் பணியிலும், சாலை விரிவாக்கப் பணியிலும் ஈடுபட்டு வருகின்றோம்.

இருசக்கர வாகனங்கள் செல்ல, கார்கள் செல்ல, கனரக வாகனங்கள் செல்ல என ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக டிராக் சிஸ்டம் விரைவில் அமைக்கப்படும். இதனால், விபத்துகள் குறையும். அதேபோல, உயிர் அமைப்பு உயிர்களைக் காக்க உருவாக்கப்பட்ட அமைப்பாகச் செயல்படுகிறது, இவ்வாறு அவர் பேசினார்.
அதேபோல, கோவை மண்டலத்திற்கு ஏற்கனவே 42 பேருந்துகள் ஒதுக்கப்பட்டு துவங்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் 33 பேருந்துகளை அமைச்சர் எஸ்.பி வேலுமணி கொடியசைத்து துவங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் கோவை மாநகர காவல் ஆணையாளர் சுமித்சரண் ஐபிஎஸ், சட்டம் ஒழுங்கு துணை ஆணையாளர் டாக்டர். பாலாஜி சரவணன், போக்குவரத்து துணை ஆணையாளர் சுஜித்குமார் ஐபிஎஸ், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் உயிர் அமைப்பின் பொறுப்பாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
