கோவை : ஆர்.எஸ்.புரம் பகுதியில் விதிகளை மீறி வைத்திருந்த பேனர்களை கிழித்து எறிந்த சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி, பேனர்களை அகற்றக் கோரி தரையில் படுத்து போராட்டம் நடத்தினார்.
கோவை : ஆர்.எஸ்.புரம் பகுதியில் விதிகளை மீறி வைத்திருந்த பேனர்களை கிழித்து எறிந்த சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி, பேனர்களை அகற்றக் கோரி தரையில் படுத்து போராட்டம் நடத்தினார்.

கோவை மாவட்டம், ஆர்.எஸ்.புரம் பகுதியில் விதிமுறைகளை மீறி பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தன. அங்கு, வந்த சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி, 3 பேனர்களைக் கிழித்து ஏறிந்தார். மேலும், நாளை கோவையில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டிகளையொட்டி, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி படம் போட்டிருந்த பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. அதனையும் சமூக ஆர்வலர் ராமசாமி கிழிக்க முயன்றார்.

அப்போது, அவரைத் தடுத்து நிறுத்திய காவல் துறையினர், பேனரை அகற்றி விடுவதாக உறுதியளித்தனர். ஆனால், உடனடியாக பேனரை அகற்றக் கோரி, பேனர் முன்பு தரையில் படுத்து போராட்டம் நடத்தினார். இதையடுத்து, "பேனரை அகற்றும் வரை அவ்விடத்தில் இருந்து செல்ல போவதில்லை. இதுதொடர்பாக, நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளேன்", என டிராபிக் ராமசாமி தெரிவித்தார்.

இதையடுத்து, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி படம் போட்டிருந்த பேனரின் ஒரு பகுதியை அவர் கிழித்தார். இதனால், காவல்துறையினருக்கும், டிராபிக் ராமசாமிக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால், அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.
